காங்கோவில் ஏற்பட்டுள்ள சமீபத்திய எபோலா பரவலின் பின்னணியில், பிரான்ஸில் முதல் எபோலா நோயாளர் உறுதி
காங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) தற்போது நிலவி வரும் எபோலா பரவலின் பின்னணியில், அந்நாட்டிலிருந்து மனிதாபிமானப் பணியை முடித்து பிரான்ஸுக்கு திரும்பிய மருத்துவர் ஒருவருக்கு எபோலா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அந்த மருத்துவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் கண்டு கண்காணிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும், ஐரோப்பாவின் பொதுமக்களுக்கு ஏற்படும் அபாயம் தற்போது குறைவாகவே இருப்பதாகவும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்ததாவது, காங்கோவில் பரவி வரும் இந்த எபோலா தொற்று, எந்த ஒரு எபோலா பரவலிலும் முதல் மாதத்திலேயே அதிகளவு உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்கள் பதிவான மிகப்பெரிய பரவலாக மாறியுள்ளது.
அரசாங்கத் தரவுகளின்படி, காங்கோவில் உறுதிப்படுத்தப்பட்ட எபோலா நோயாளர்களின் எண்ணிக்கை 1,094 ஆக உயர்ந்துள்ளது. இதில் 277 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த பரவல், எபோலா வைரஸின் அரிதான புண்டிபுக்யோ (Bundibugyo) வகையுடன் தொடர்புடையதாகும். இந்த நோய் பரவல் தாமதமாகவே கண்டறியப்பட்டதாகவும், 15 மே அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே பல மாதங்களாக வைரஸ் பரவி வந்திருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
WHO-வின் அதிகாரியான அப்திரஹ்மான் மஹாமுத், ஜெனீவாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், இந்தப் பரவல் இவ்வளவு வேகமாக அதிகரித்ததற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, ஆரம்ப கட்டத்திலேயே உறுதிப்படுத்தப்பட்ட சில நோயாளர்கள் புனியா (Bunia) மற்றும் மொங்க்ப்வாலு (Mongbwalu) போன்ற நகர்ப்புற பகுதிகளில் பதிவாகியிருந்ததே என கூறினார்.
முன்னைய பல எபோலா பரவல்கள் பெரும்பாலும் கிராமப்புறங்களில் தொடங்கி, குறுகிய காலத்திலேயே கட்டுப்படுத்தப்பட்டிருந்தன. ஆனால் இம்முறை நகர்ப்புறங்களில் ஆரம்பித்திருப்பது பரவலை வேகமாக்கியுள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
“இப்போது மிக முக்கியமானது, எங்கள் நடவடிக்கைகளை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். ஏனெனில் இந்தப் பரவல் எங்களை விட வேகமாக நகர்கிறது,” என்று கடந்த வாரம் புனியா பகுதியில் இருந்து திரும்பிய அப்திரஹ்மான் மஹாமுத் தெரிவித்தார்.
இதற்கு முன் உலகில் ஏற்பட்ட மிகப்பெரிய இரண்டு எபோலா பரவல்களில் ஒன்று 2014 முதல் 2016 வரை மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினியா, சியாரா லியோன் மற்றும் லைபீரியாவில் ஏற்பட்டதாகும். அந்தப் பரவலில் 11,325 பேர் உயிரிழந்தனர். மற்றொன்று 2018ஆம் ஆண்டு காங்கோவில் ஏற்பட்ட பரவல்; அதில் 2,299 பேர் பலியாகினர்.




