2024 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பாடசாலை அடிப்படையிலான மாணவர் சுகாதாரக் கணக்கெடுப்பின் கண்டுபிடிப்புகளின்படி, இலங்கைப் பாடசாலை மாணவர்களில் சுமார் 12% பேர் அதிக எடையுடனும், 3% பேர் உடல் பருமனுடனும் உள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறிப்பாக நாட்டின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் குறைந்துள்ள இக்காலகட்டத்தில், இந்தக் கண்டுபிடிப்புகள் கவலையளிப்பதாக ஊட்டச்சத்துப் பிரிவின் இயக்குநரும் நிபுணருமான டொக்டர் மோனிகா விஜேரத்ன கூறினார்.
இந்தக் கணக்கெடுப்பு 13 முதல் 17 வயதுக்குட்பட்ட மாணவர்களை உள்ளடக்கியதுடன், அவர்களின் உணவுப் பழக்கவழக்கங்களையும் ஆய்வு செய்தது.
“2024 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பாடசாலை அடிப்படையிலான மாணவர் சுகாதாரக் கணக்கெடுப்பின்படி, 13 முதல் 17 வயதுக்குட்பட்ட மாணவர்களில் 12% பேர் அதிக எடையுடனும், 3% பேர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டும் உள்ளனர்,” என்று விஜேரத்ன கூறினார்.
17.04% மாணவர்கள் தினமும் கார்பனேற்றப்பட்ட பானங்களை அருந்துவதாகவும், 28.05% பேர் அதிக உப்புள்ள உணவுகளைத் தவறாமல் உட்கொள்வதாகவும் இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது என்று அவர் கூறினார்.
“சுமார் 17.04% பாடசாலை மாணவர்கள் தினமும் கார்பனேற்றப்பட்ட பானங்களை அருந்தும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். மேலும் 28.05% பேர் அதிக உப்புள்ள உணவுகளையும், 29% பேர் அதிக கொழுப்புள்ள உணவுகளையும், 41% பேர் அதிக சீனியுள்ள உணவுகளையும் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது அல்லது அதைவிட அடிக்கடி உட்கொள்கின்றனர்,” என்று அவர் கூறினார்.
பாடசாலை மாணவர்களிடையே ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களின் அதிகரித்து வரும் தாக்கத்தை இந்தக் கண்டுபிடிப்புகள் எடுத்துக்காட்டுகின்றன என்று டொக்டர் விஜேரத்னே கூறினார்.
“தற்போதைய தரவுகளின்படி, நமது மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது. அது 1.9-லிருந்து 1.3-ஆகக் குறைந்துள்ளது. இதனால், மோசமான ஊட்டச்சத்து தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளால் பாடசாலை மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானது,” என்று அவர் மேலும் கூறினார்.




