ஈஸ்டர் ஞாயிறு அன்று நடந்த தொடர் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சாலே, நேற்று முன்தினம் (13) காலை முதல் மருந்துகளை பயன்படுத்தத் தொடங்கியுள்ளார் என்று மருத்துவமனை மற்றும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
உணவுப் புறக்கணிப்பு மற்றும் உடல்நலக் கோளாறுகள் காரணமாக சுரேஷ் சாலே 7ஆம் திகதி கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்ற பின்னர், அவர் பொது வார்டுக்கு மாற்றப்பட்டார்.
அங்கு, அவருக்கு சேலைன் கொடுக்கப்பட்டது, மேலும் அவர் தொடர்ந்து உணவையும் மருந்தையும் மறுத்து வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் (13) சாலே தனது மருந்தை உட்கொள்ளாததற்காக ஒரு தாதியர் அவரைக் கடுமையாகக் கண்டித்து, அவருக்கு மருந்தைக் கொடுத்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் அந்தச் தாதியர், சாலேவிடம், “இது ஒரு மருத்துவமனை. மருத்துவமனையில் நோயாளிகள் இறப்பதை அனுமதிக்க முடியாது. நோயாளி, மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்தை உட்கொள்ள வேண்டும். எனவே, நீங்கள் இந்த மருந்தை உட்கொள்ள வேண்டும்,” என்று கடுமையாகக் கூறி, அவரை மருந்தை உட்கொள்ள வைத்ததாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. மருந்தை உட்கொண்ட போதிலும், சாலே தனது உண்ணாவிரதத்தைத் தொடர்வதாகக் கூறப்படுகிறது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை தீவிரமடைந்து, கோட்டாபய மீதான பயணத்தடை பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து சாலே உண்ணாவிரதத்தை ஆரம்பித்தது கடுமையான சந்தேகங்களை எழுப்பியிருந்தது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை வளையத்திலிருந்து தப்பிக்க இந்த நாடகம் ஆடப்படுகிறதா என்ற கோணத்திலும் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார்.




