மே 30, சனிக்கிழமையன்று, பிரான்ஸின், பாரிஸ் நகர், போபிக்னியில் இரண்டு கத்திகளுடன் இருந்த ஒருவரை ஒரு காவல்துறை உத்தியோகத்தர் சுட்டுக் கொன்றார். பாரிஸ் காவல்துறை தலைமையகத்தின்படி, “வாடகை தகராறு” காரணமாக அந்த நபர் இருவரைக் காயப்படுத்தியுள்ளார்.
சுட்டுக்கொல்லப்பட்டவர் இலங்கைத் தமிழர் என்றும், முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
அக்கம் பக்கத்து வீட்டு தகராறு துயரமாக முடிந்தது. போபிக்னியில் (செய்ன்-செயிண்ட்-டெனிஸ்), ரூ ஹெக்டர்-பெர்லியோஸில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் இரண்டு கத்திகளுடன் இருந்த ஒருவரை காவல்துறை சுட்டுக் கொன்றது. பிற்பகல் 2 மணியளவில், அக்கம் பக்கத்தினருக்கு இடையேயான தகராறைத் தீர்த்து வைப்பதற்காக குற்றத் தடுப்புப் படையின் (BAC) உத்தியோகத்தர்கள் அழைக்கப்பட்டனர். “வாடகை தகராறு காரணமாக இருவர் கத்தியால் காயமடைந்ததைத் தொடர்ந்து, போபிக்னியில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் காவல்துறை தலையிட்டது,” என்று காவல்துறை தலைமையகம் கூறியது.
அக்கம் பக்கத்தில் இருந்த இருவர் காயமடைந்தனர். கட்டிடத்தின் 6வது மாடியில் உள்ள மின்தூக்கியிலிருந்து வெளியே வந்த உடனேயே காவல்துறை உத்தியோகத்தர்கள் இந்தச் சூழ்நிலையை எதிர்கொண்டனர். இரண்டு கத்திகளுடன் அச்சுறுத்தும் நிலையில் இருந்த ஒருவரை அவர்கள் நேருக்கு நேர் சந்தித்தனர். விசாரணைக்கு நெருக்கமான ஒரு வட்டாரத்தின்படி, தாக்குதல் நடத்தியவர் ஒவ்வொரு கையிலும் ஒரு கத்தியுடன் காவல்த்துறையினரை நோக்கிப் பாய்வதற்கு முன்பு அவர்களை மிரட்டியுள்ளார். காவல்த்துறையினரில் ஒருவர், அவரை உதைத்துத் தள்ளிவிட முயன்றதாகக் கூறப்படுகிறது, ஆனால் அவர் மீண்டும் பாய்ந்தார். அப்போதுதான், காவல்த்துறை உத்தியோகத்தர் ஒருவர் தனது துப்பாக்கியை இரண்டு முறை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகி, தாக்குதல் நடத்தியவரின் வயிற்றில் சுட்டார். அவசர மருத்துவ சேவையின் (SAMU) தலையீட்டையும் மீறி, அந்த நபர் தனது காயங்களால் உயிரிழந்தார்.
‘காவல்துறை தலையிடுவதற்கு முன்பு அந்த நபர் தனது இரண்டு அண்டை வீட்டாரைக் காயப்படுத்தியுள்ளார்.




