யாழில் 15 வயதான பாடசாலை மாணவியொருவர் ஏழரை மாத கர்ப்பிணியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரை வல்லுறவுக்குள்ளாக்கியதாக சகோதரன் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு, பனிப்புலம் பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.
பாடசாலை மாணவியான 15 வயது சிறுமி, வயிற்று வலி இருப்பதாக தாயாரிடம் கூறியதையடுத்து, வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். வைத்திய பரிசோதனையில், மாணவி ஏழரை மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.
அதுவரை மாணவி பாடசாலை சென்று வந்தார்.
மாணவி கர்ப்பமாக இருப்பது தெரிந்ததும், தாயார் உடனடியாக இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றார்.
பொலிசார் மாணவியை கைது செய்து, வைத்திய பரிசோதனையின் பின் விசாரணை நடத்தினர். தனது தாயாரின் சகோதரியின் மகனான- ஒன்றுவிட்ட சகோதரன்- ஒருவரும், மற்றொரு நபரும் தன்னை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியதாக மாணவி தெரிவித்தார்.
அவரது தகவலுக்கமைய 17, 20 வயதான இருவர் கைது செய்யப்பட்டனர்.
சிறுமி குழந்தை பிரசவித்த பின்னர், டிஎன்ஏ பரிசோதனையின் அடிப்படையில் மேலதிக விசாரணை நடத்தப்படும்.




