ஏறாவூர் பிரதேசத்தில் போதைப் பொருள் வியாபாரி ஒருவரின் வீட்டை நேற்று வியாழக்கிழமை (09) இரவு முற்றுகையிட்ட பொலிசார், வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர் மற்றும் வியாபாரி ஒருவர் உட்பட இருவரை 6840 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் தெரிவித்தனர்.
மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையயடுத்து மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலீத் லீலாரெத்தினவின் ஆலோசனைக்கு அமைய மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவ தினமான நேற்று இரவு 10.00 மணியளவில் ஏறாவூர் முதலம் பிரிவு நூலக வீதியிலுள்ள போதை பொருள் வியாபாரியின் வீட்டை முற்றுகையிட்டனர்.
இதன்போது வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வியாபரியிடம் இருந்து 5840 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருளை கைப்பற்றிய நிலையில் வீட்டை சோதனையிட்டபோது மேலும் 100 மில்லிக்கிராம் ஜஸ் போதை போருளை மீட்டதுடன் அங்கு போதை வியாபாரியுடன் இருந்த வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர் உட்பட இருவரையும் கைது செய்து ஏறாவூர் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் தடுப்பு காவலில் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
-கனகராசா சரவணன்-



