தமிழர்களின் ஜனநாயக குரலை அடக்கி ஒடுக்கும் நிகழ்நிலை காப்பு சட்டத்தை எந்த மக்கள் எதிர்தார்களே அந்த சட்டத்தை பயன்படுத்தி தமிழ் தாயகத்தில் உண்மையை வெளியே கொண்டு வந்த சிலருக்கு எதிராக இரா.சாணக்கியன் வழக்கு தாக்குதல் செய்து ஒரு துர்ப்பாக்கியமான நிலையை ஏற்படுத்தி இருக்கிறார். எனவே இந்த விஷயங்களை மக்கள் சரியாக புரிந்து கொண்டு எதிர் காலத்தில் சரியான பாராளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்ய வேண்டும் என என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளர் த. சுரேஸ் தெரிவித்தார்.
தியாக தீபம் அன்னை பூபதியின் 38 வது நினைவேந்தல் மாதத்தை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினர் மட்டக்களப்பு நாவலடியில் உள்ள அன்னாரது நினைவு தூபியில் சுடர் ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தி அன்னை பூபதி மாதத்தை கடந்த (19) ஆரம்பித்து வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.;
2024 பெப்பிரவரி 2ம் திகதி இந்த நாட்டில் நிகழ்நிலை காப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது இந்த சட்டம் ஜனநாயக ரீதியாக குரல் கொடுக்கும் மக்களை உண்மையை வெளிக்கொண்டு வரும் ஊடகவியலாளர்களை ஒடுக்குகின்ற ஒரு சட்டமாகும் .
இவ்வாறு ஒடுக்குகின்ற இந்த நிகழ் நிலை காப்பு சட்டத்தை கடந்த 2024 ம் ஆண்டு பாராளுமன்றத்திலும் வெளியிலும் பாராளுமன்ற உறுப்பினர்களும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஜனநாயகத்துக்கு குரல் கொடுக்கின்ற அமைப்புக்களும் எதிராக குரல் கொடுத்திருந்தனர் அப்படி இருந்தும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை யினால் அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது.
குறிப்பாக தமிழர்களை பொறுத்தமட்டில் போராடுவதும் ஜனநாயக ரீதியாக கருத்துக்களை கூறுவதை அடக்கி ஒடுக்கும் சட்டம் என்ற அடிப்படையில் தமிழர் தாயகத்தில் யாருமே ஏற்றுக் கொள்ள முடியாத சட்டமாக இருக்கின்ற காரணத்தால் அந்த சட்டத்தை எமது தாயகம் முழுமையாக எதிர்த்தனர்.
அப்படி இருந்தும் ஒரு சில வாரங்களுக்கு முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் இந்த நிகழ் நிலை காப்பு சட்டத்தை பயன்படுத்தி தமிழ் தாயகத்தில் உண்மையை வெளியே கொண்டு வந்த சிலருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து ஒரு துர்ப்பாக்கியமான நிலையை ஏற்படுத்தி இருக்கிறார்.
எனவே குறிப்பாக மட்டக்களப்பு மக்கள் வெக்கப்படுகின்றனர் உண்மையில் இந்த சட்டத்துக்கு எதிராக எந்த மக்கள் எதிர்த்து இருந்தார்களே அந்த சட்டத்தை பயன்படுத்தி எமது இளைஞர்களை நீதிமன்றில் உள்வாங்கியது மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாத விடையமாக இருக்கின்றது. என இந்த விடயங்களை மக்கள் சரியாக புரிந்து கொண்டு எதிர் காலத்தில் சரியான பாராளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்ய வேண்டும் என்றார்.
-கனகராசா சரவணன்-



