போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த்தை சென்னை – நுங்கம்பாக்கம் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் திரையுலகைச் சேர்ந்த வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையைச் சேர்ந்த பிரசாத் என்பவரிடமிருந்து நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வாங்கியதாக கூறப்படுகிறது. அவரிடமிருந்து 12 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஒரு கிராம் போதைப் பொருளை நடிகர் ஸ்ரீகாந்த் 40 முறைக்கு மேல் வாங்கிப் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. அதற்கான பணப்பரிவர்த்தனை கூகுள் பே மூலம் நடந்துள்ளதாகவும் தெரிகிறது.
இது குறித்து விசாரணை நடத்திய சென்னை – நுங்கம்பாக்கம் போலீஸார், இன்று காலை 8 மணிக்கு, நடிகர் ஸ்ரீகாந்த்தை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது, அவருடைய ரத்த மாதிரிகள் சேகரிப்பட்டு, மருத்துவப் பரிசோதனையும் நடத்தப்பட்டது. இதில் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நுங்கம்பாக்கம் போலீஸார், நடிகர் ஸ்ரீகாந்த்தை கைது செய்துள்ளனர்.
மேலும், இந்த போதைப்பொருள் வழக்கில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது? திரையுலகைச் சேர்ந்தவர்கள் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து நுங்கம்பாக்கம் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போதைப்பொருள் வழக்கில் ஏற்கெனவே பிரசாத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது.




