இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராசாவை, டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான அரச ஆதரவு ஆயுதக்குழுவான ஈ.பி.டி.பி படுகொலை செய்ய முயன்றது என பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார் இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்.
இன்று (6) பாராளுமன்றத்தில் மாவை சேனாதிராசாவுக்கான அனுதாப பிரேரணை நேரத்தில் உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
2001.11.28 ஆம் திகதி யுத்தத்தின் நடுப்பகுதியில் தீவகத்தில் அரசியல் பிரச்சார பணிக்காக சென்ற போது, அப்போது இலங்கையின் செல்வாக்கு மிக்க அமைச்சராக பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த டக்ளஸ் தேவானந்தாவின் ஆயுதக்குழு நாரந்தனை தம்பாட்டியில் வைத்து அண்ணன் மாவை சேனாதிராசா மீது நடத்திய கொலைவெறித் தாக்குதலில் 2 பேர் வாள்களால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொல்லப்பட்டனர்.
மாவை சேனாதிராசா, சிவாஜிலிங்கம் உள்ளிட்ட 28 பேர் காயமடைந்தனர். டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான அரச ஆதரவு ஆயுதக்குழு நடத்திய இந்த கொலைவெறி தாக்குதலில் மாவை சேனாதிராசா உயிர்தப்பி இறுதிவரை தனது பணியை ஆற்றினார்.
சிவாஜிலிங்கம் இந்த தாக்குதலில் காயமடைந்து, இன்றும் பாதிக்கப்பட்டவராக காணப்படுகிறார்.
நேற்று நடந்த சம்பவங்களை பார்க்கும் போது தமிழ் தேசிய அரசியலில் எவ்வளவு இடைவெளிகள் காணப்படுகின்றன என தெரிகிறது என்றார்.



