ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் சிந்தனைக்கு எதிர் மறையாக தேசிய மக்கள் சக்தி, வடபகுதியில் இயங்குவதாக தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளரான பொன்.சுதன் தெரிவித்துள்ளார்.
சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தில் ஞாயிற்றுக்கிழமை (01) ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தி அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
தேசிய மக்கள் சக்தியின் உயர்ந்த கொள்கையானது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் உயரிய சிந்தனைக்குள் உதயமானது.
ஆனால், வடபகுதியில் தேசிய மக்கள் சக்தி நடந்து கொள்ளும் விதமானது அதற்கு நேர் எதிராக காணப்படுகின்றது.ஜனநாயகம் என்பது ஒரு சிறிதளவும் இருப்பதாக இல்லை.
மக்களுடைய ஆணைக்கு எதிராக, ஜனநாயக விரோதமாக நடந்து கொள்ளும் போது அதை நாங்கள் தட்டிக் கேட்க முனைந்தால் தேசிய மக்கள் சக்தியில் ஒரு தலைமைத்துவத்துடன் எமது பிரச்சினையை கரிசனையோடு கேட்பதற்கு ஒரு பண்புள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவம் இங்கில்லை.
ஜனாதிபதியின் கொள்கையை ஏற்று,அவரது கருத்துக்களை நம்பித்தான் நாம் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து பணி புரிந்தோம்.ஆனால் தேசிய மக்கள் சக்தியும் ஏனைய கட்சிகளை போன்றுதான் செயற்படுவதை காணக் கூடியதாக உள்ளது.
இது தொடர்பாக நான் தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்கள் பலருடன்,அமைச்சர் சந்திரசேகரனுடன் கலந்துரையாடினேன்.வெள்ளிக்கிழமை (30) பிற்பகல் 02.00 தன்னை சந்திப்பதற்கான அனுமதியை அமைச்சர் எனக்கு வழங்கியிருந்தார்.
தேசிய மக்கள் சக்தியின் யாழ். அலுவலகத்திற்கு வாருங்கள்,அங்கு நாம் மேற்கொண்டு கலந்துரையாடி மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் யாழ் அலுவலகத்திற்கு பிற்பகல் 02.00 மணிக்கு சென்ற நான் மாலை 06.00 கடந்தும் அமைச்சரை சந்திப்பதற்காக அங்கேயே காத்திருந்தேன்
02.00 மணிக்கு வருமாறு கூறிய அமைச்சர் அலுவலகத்தில் இல்லாததால் அவரது உதவியாளர்களிடம் பல முறை தெரிவித்தும் சந்திப்பதற்கு தான் வருவதாக கடைசிவரை அவர் கூறி இருக்கவில்லை.பின்பு அவர் இன்னொரு கலந்துரையாடலுக்கு சென்றுவிட்டதாக அழைப்பு வந்தது.
ஆனால் அமைச்சர் எங்கு சென்றார் என்பதை தேடி அறிந்த போது யாழ். தியேட்டர் ஒன்றில் அந்த நேரத்தில் அமைச்சர் படம் பார்த்துக் கொண்டிருந்தார்.
இவ்வாறு என்றால் கொஞ்சம் சிந்திக்க வேண்டும் கட்சிக்காக உங்களுக்காக உழைத்த ஒருவரை சந்திக்க அழைத்து விட்டு நீங்கள் படம் பார்க்க சென்றிருக்கிறார் என்றால் ஜனாதிபதியின் கருத்தியலுக்கு ஏற்ப மக்களுக்கு எவ்வாறு நீங்கள் சேவை செய்ய போகிறீர்கள்- என்றார் அவர்.



