முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் பகுதியில், பக்கத்து வீட்டு நாய் கடித்ததில் ஒரு பெண்ணின் ஆடு உயிரிழந்ததுள்ளது. இதனால், இரு தரப்பினருக்குமிடையே பிணக்கு ஏற்பட்டு, ஆட்டின் உரிமையாளர் பெண், நேற்று (25.01.2025) இணக்கசபையில் புகார் கொடுத்துள்ளார்.
இணக்கசபையில் விசாரணை நடத்தப்பட்டபோது, நாயின் உரிமையாளர் மிகவும் வறுமைக்கோட்டில் வாழும் பெண் என்பதால், அவர் சேதத்திற்கான நட்டஈடு வழங்க இயலாது என்று தெரிவிக்கப்பட்டதைத்தொடர்ந்து, ஆட்டின் உரிமையாளர் பெண், குறித்த நாயை தன்னிடம் வழங்கும்படி கோரிக்கை விடுத்தார்.
இணக்கசபையின் பரிந்துரையை ஏற்று, நாயின் உரிமையாளர், நாயை ஆட்டின் உரிமையாளருக்கு ஒப்படைத்தார்.
அதன்பின், பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், ஆட்டின் உரிமையாளரான பெண், குறித்த அந்த நாயை வளர்க்காமல், அதை தூக்கில் போட்டு கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவத்தை நாயின் உரிமையாளர் படம் எடுத்து சமூகத்திற்கு வெளியிட்டுள்ளார். இதனால் மாங்குளம் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இறந்த நாயின் உரிமையாளர், இந்தப் சம்பவத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்து வருகின்றார். மாங்குள மக்கள், இவ்வாறான சம்பவங்களால் இணக்கசபையின் செயல்பாடுகள் மீதும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
குறித்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊடகங்களில் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.




