திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை முகத்துவாரம் களப்புக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவரொருவர் காணாமல் போயிருந்த நிலையில் இன்று திங்கட்கிழமை (27) காலை பிரதேச மீனவர்களால் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலத்தை மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌஸான் இன்று சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டதுடன் சடலம் பிரேத பரிசோதனைகளூக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நேற்று (26) தோணியொன்றில் மீன்பிடிக்கச் சென்ற இலங்கைத்துறை முகத்துவாரத்தைச் சேர்ந்த வடிவேல் மகேந்திரன் (வயது 53) என்ற மீனவர் கடலில் காணாமல் போயிருந்த நிலையில் அவரது சடலம் இன்று (27) பிரதேச மீனவர்களால் மீட்கப்பட்டிருந்தது.
இவர் தோணியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது படகொன்று மோதி படகில் வந்தோர் தப்பித்துச் சென்றிருக்கலாம் எனவும், இதனால் தோணி கடலில் புரண்டிருக்கலாமெனவும் சந்தேகம் எழுந்துள்ளது.

இந்திலையில் தோணியில் மோதி விபத்தை ஏற்படுத்தினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் படகில் மீன்பிடியில் ஈடுபட்ட படகோட்டி மற்றும் உதவியாளர் உறட்பட இருவரை ஈச்சிலம்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கின்றனர்.



