மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக, தாழ்நிலங்களும் வயல் நிலங்களும் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மண்டூர், வெல்லாவெளி, வேத்துச்சேனை, பாலையடிவட்டை, காக்காச்சிவட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் வேளாண்மை செய்யப்பட்ட வயல் நிலங்கள் முழுவதும் நாசமாகியுள்ளன.
போரதீவுபற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மண்டூர் கமநல சேவை நிலையத்தின் கீழ் 6,000 ஏக்கருக்கும் அதிகமாக பெரும்போக நெல் செய்கை நடத்தப்பட்ட நிலையில், அதிகரித்த மழை வீழ்ச்சி மற்றும் நவகரி குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதனால் இப்பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இம்மழை தொடர் வீழ்ச்சியால் 70 நாட்களேயான பயிர்களை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குடலைப்பருவத்தில் இருந்து கதிர்பருவத்திற்கு மாறும் இவ்வேளையில், அதிகமான மழை மற்றும் குளங்களில் நீர் திறக்கப்பட்டதால், விவசாயிகள் மிகுந்த நெருக்கடியில் உள்ளனர்.
கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் அடைந்த சேதத்தின் பூரண மீட்புக்கு முன்பே, இவ்வருடத்தின் தொடக்கத்திலே அடுத்த வெள்ள அனர்த்தத்தாலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, எதிர்பார்த்த விளைச்சலையும் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், நெல்லுக்கான உத்தரவாத விலையை இன்னும் நிர்ணயிக்காத நிலையிலும், தனது உழைப்பின் பயனைக் காண முடியாத நிலை விவசாயிகளை மேலும் சோர்வடையச் செய்யும் வகையில் உள்ளதாகவும், அவர்கள் தங்கள் மனவேதனையை வெளியிட்டுள்ளனர்.
விவசாயிகளின் இந்த அவசர நிலைக்கு உடனடி தீர்வு தேவை என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்



