மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி பகுதியில் இன்று (14) முற்பகல் வீடு ஒன்றில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்
இந்த வீட்டில் வசித்த இளம் பெண் ஒருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்
முற்பகல் வேளை குறித்த பெண்ணின் வீட்டுக்கு வந்த நபர் ஒருவர் பெண்ணை துப்பாக்கியினால் தாக்கியுள்ளதுடன் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
சித்தீக் சிபானியா (32) என்பவரே இச் சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.
இப்பெண்ணின் கணவர் அவுஸ்த்ரேலியாவில் இருப்பதாகவும் இவர் ஒரு மௌலவி எனவும் பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த பெண்ணுக்கு ஒரு மகன் இருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்
ஆரம்பக் கட்ட விசாரணைகளை மேற்கொண்டு வரும் காத்தான்குடி பொலிஸார் குறித்த பகுதியிலுள்ள சி.சி.ரி.வி கமராக்களையும் சோதனை செய்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த பெண்ணின் வீட்டில் தடயவியல் பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் போது குறித்த பெண்ணின் வீட்டிலிருந்து துப்பாக்கி ரவைகளையும் மீட்டுள்ளனர்.
காயமடைந்த பெண் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.




