இ.போ.ச பேரூந்து சாரதி ஒருவரை காரில் கடத்திச் சென்று அடித்து உதைத்து, வாளால் வெட்டி வீதியில் விட்டுச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் உட்பட நால்வரை பண்டாரகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சாரதியை கடத்த பயன்படுத்திய காருடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் சுகாதார அமைச்சின் சாரதி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உடஹமுல்ல இ.போ.ச டிப்போவின் சாரதியான பண்டாரகம ரைகம பிரதேசத்தைச் சேர்ந்த ரசிக பெரேரா (45) என்பவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது பண்டாரகம மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தாக்குதலுக்கு உள்ளான சாரதி சுமார் 18 வருடங்களாக பண்டாரகம ரைகமவில் இருந்து கொழும்பு ஹெட்டியாவத்தை வரை தினமும் பணிபுரிந்து வருவதாகவும், குறித்த பஸ் டிப்போவில் இருந்து மட்டுப்படுத்தப்பட்ட நிறுத்த பஸ்ஸாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தாக்குதலை நடத்திய பிரதான சந்தேகநபர் பண்டாரகம கலனிகம மற்றும் வீடகம பகுதிக்கு இடைப்பட்ட பஸ் தரிப்பிடத்தில் தங்கி பல நாட்களாக பஸ்சை நிறுத்த முயற்சித்த போதிலும் பஸ் அந்த இடத்தில் நிற்காத காரணத்தினால் கடந்த சில நாட்களாக சாரதியின் தொலைபேசிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பிரதான சந்தேகநபர் தனது சகோதரன் மற்றும் இரண்டு நபர்களுடன் சாரதியின் வீட்டிற்குச் சென்று அவரை காரில் வீட்டிலிருந்து வெளியே அழைத்துச் சென்று கொத்தலாவல உயன்வத்தை ஏரி வீதிக்கு அழைத்துச் சென்று வாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
அந்த வகையில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம், பண்டாரகம வீடாகம பிரதேசத்தில் வசிக்கும் பிரதான சந்தேகநபர் மற்றும் அவரது சகோதரரும், கோனாபொல மற்றும் தொடங்கொட பிரதேசத்தை சேர்ந்த ஏனைய இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.




