நடப்பு ஐபிஎல் சீசனின் இரண்டாவது குவாலிபையர் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை 36 ரன்களில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் அந்த அணி இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை மேற்கொள்கிறது.
சென்னை – சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் நாணயச்சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச முடிவு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 175 ரன்கள் எடுத்தது.
அதன்படி ஹைதராபாத் அணியின் ஓப்பனராக களமிறங்கிய அபிஷேக் சர்மா ஒரு சிக்ஸ், ஒரு ஃபோர் என அமோகமாக ஆரம்பித்தார். ஆனால் முதல் ஓவரிலேயே 12 ரன்னுக்கு அவுட்டாகி நடையைக் கட்டினார்.
2 சிக்சர்களை விளாசி நன்றாக ஆடிக்கொண்டிருந்த ராகுல் திரிபாதி 5ஆவது ஓவரில் 37 ரன்களுக்கு விக்கெட்டானார். அவரைத் தொடர்ந்து வந்த ஏய்டன் மார்க்ராம் அதே ஓவரில் 1 ரன்னுக்கு அவுட். பொறுப்பாக ஆடிய டிராவிஸ் ஹெட் 34 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் 99 ரன்களைச் சேர்த்திருந்தது.
ஒருபுறம் ஹென்ரிச் கிளாசன் மட்டும் நின்று ஆட, மறுபுறம் வந்த நிதிஷ் ரெட்டி 5 ரன்களில் அவுட். அவருக்கு அடுத்து வந்த அப்துல் சமது டக் அவுட் என வீரர்கள் சொதப்பினர். கிளாசன் மட்டும் போராடி அரைசதம் கடந்து 19ஆவது ஓவரில் போல்டானார்.
ஷாபாஸ் அகமது 18 ரன்கள், ஜெய்தேவ் உனத்கட் 5 ரன்களில் விக்கெட்டாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் 175 ரன்களைச் சேர்த்தது. பாட் கம்மின்ஸ் 5 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
ராஜஸ்தான் அணி தரப்பில் டிரன்ட் போல்டு, அவேஷ் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், சந்தீப் சர்மா 2 விக்கெட்டையும் வீழ்த்தினார்.
176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ராஜஸ்தான் ரோயல்ஸ் விரட்டியது. ஜெய்ஸ்வால் மற்றும் டாம் இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். 16 பந்துகளுக்கு 10 ரன்கள் எடுத்த நிலையில் டாம் ஆட்டமிழந்தார். அவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கப்டன் கம்மின்ஸ் வெளியேற்றினார்.
இருந்தாலும் ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடி ரன் குவித்தார். 21 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஷாபாஸ் அகமது சூழலில் அவுட் ஆனார். தொடர்ந்து ராஜஸ்தான் ரோயல்ஸ் கப்டன் சஞ்சு சாம்சன், ரியான் பராக், அஷ்வின், ஹெட்மயர், பவல் ஆகியோர் ஆட்டமிழந்தனர். துருவ் ஜுரல், 35 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார்.
20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்தது ராஜஸ்தான். இதன் மூலம் 36 ரன்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற்றது. அந்த அணி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு இருந்தனர். ஷாபாஸ் அகமது (3) மற்றும் அபிஷேக் சர்மா (2) விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இருவரும் நான்கு ஓவர்கள் வீசி முறையே 23 மற்றும் 24 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தனர். அந்த அணியின் பீல்டிங் செயல்பாடும் அபாரமாக இருந்தது.