குஜராத் மாநிலத்தில் வல்சாத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான அனந்த் படேலுக்கு ஆதரவாக பிரியங்கா காந்தி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,“நமது பிரதமர் திமிர் பிடித்தவர். அவரிடம் பேச யாருக்கும் தைரியம் இல்லை. இப்படி இருக்கும் போது உங்கள் நிலைமையை அவர் எப்படி அறிந்துகொள்வார்? அவர் உங்களைச் சந்திக்க வராத பிரதமர், உண்மையான பிரச்னைகளை எவ்வாறு அறிந்துகொள்வார்? நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த பல பிரதமர்களை நான் பார்த்திருக்கிறேன்.
என் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே நாட்டுக்காக பணியாற்றினார்கள் என்று நான் கூறவில்லை. ஆனால் நாட்டுக்காக தன் உயிரை தியாகம் செய்த இந்திரா காந்தி, ராஜீவ் காந்தியும் பிரதமர்கள்தான். என்னுடைய தந்தையை துண்டுத் துண்டாக வீட்டிற்கு கொண்டுவந்தேன். மன்மோகன் சிங், தனது ஆட்சி மூலம் நாட்டில் புரட்சியை ஏற்படுத்தினார். காங்கிரஸ் மட்டுமல்ல, அடல் பிஹாரி வாஜ்பாய் கூட பிரதமராக இருந்திருக்கிறார். ஆனால், உங்கள் முன் பொய் பேசும் நாட்டின் முதல் பிரதமர் மோடி என்று உறுதியாகச் சொல்கிறேன். அவர் என் குடும்பத்தை துஷ்பிரயோகம் செய்தார்.
அதற்கெல்லாம் நாங்கள் கவலைப்படவில்லை. பா.ஜ.க தலைவர்களும் வேட்பாளர்களும் அரசியல் சட்டத்தை மாற்றுவோம் என்று கூறுகிறார்கள். ஆனால் பிரதமர் மோடி அதை மறுத்து வருகிறார். இது அவர்களின் தந்திரம். அவர்கள் செய்ய விரும்புவதை கீழ்மட்ட நிர்வாகி பேசுவார். அவர்களின் தலைமை அதை மறுக்கும். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அதை அமல்படுத்துவார்கள். சாமானிய மக்களை பலவீனப்படுத்தவும், அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் பறிக்கவும் மட்டுமே அவர்கள் அரசியலமைப்பை மாற்ற விரும்புகிறார்கள்.
தேர்தல்களின் போது மட்டுமே பிரதமர் மோடி சூப்பர் மேன் போல மேடைக்கு வருகிறார். ஆனால் மக்கள் அவரை மெஹெங்காய் (பணவீக்கம்) மனிதராகத்தான் நினைவில் கொள்கிறார்கள். பா.ஜ.க தலைவர்கள் பிரதமரை சக்தி வாய்ந்தவர் என்று முன்னிறுத்தி, அவரால் ரஷ்யா-உக்ரைன் போரை விரல் அசைவால் நிறுத்த முடியும் என்று கூறுகிறார்கள். பிறகு ஏன் அவரால் வறுமையை ஒழிக்க முடியவில்லை” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.



