அண்மையில் திருமணமான கணவன், மனைவி, கணவனின் கள்ளக்காதலி ஆகியோர் அடிதடியில் ஈடுபட்ட நிலையில், மாதம்பே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குருநாகல் பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் பிரதி அதிபரான 45 வயதுடைய பெண் ஒருவர் நேற்று (15) செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இந்த கைது இடம்பெற்றுள்ளது.
மாதம்பேயில் வசிக்கும் சிங்களப் பெண் மாத்தளையைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவரை மணந்துள்ளார். அதனையடுத்து, குறித்த பெண் தனது கணவரை மாதம்பே, ஜயபிம பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு தங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.
இதேவேளை, குருநாகல், மரலுவாம பிரதேசத்தில் வசிக்கும் 45 வயதுடைய பெண் ஒருவர், தற்செயலாக அறிமுகமாகி உறவில் ஈடுபட்ட ஒருவரைப் பற்றி விசாரிப்பதற்காக நேற்று (15) மாதம்பே பிரதேசத்திற்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர் ஜயபிம, மாதம்பே பகுதியில் உள்ள யுவதியின் வீட்டிற்கு சென்ற பெண், அப்போது வீட்டில் இருந்ததாக கூறப்படும் முஸ்லிம் ஆண் மற்றும் யுவதியை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் குருநாகலில் இருந்து வந்த குறித்த பெண், தனது கள்ளக்காதலனும், அவரது தற்போதைய மனைவியும் சேர்ந்து தன்னை தாக்கியதாக மாதம்பே பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
பின்னர் இச்சம்பவத்தில் தொடர்புடைய மூவரையும் மாதம்பே பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



