குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவை முன் கூட்டியே வாகன விபத்தில் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டதாக சட்டமா அதிபர் நேற்று (4) மேன்முறையீட்டு நீதிமன்றில் அறிவித்தார்.
தனக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படாமைக்கு எதிராக அபேசேகரவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ரொஹந்த அபேசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவின் பிரகாரம், பாதிக்கப்பட்ட மற்றும் சாட்சிகள் பாதுகாப்பு அதிகாரசபையின் புலனாய்வுப் பிரிவு அபேசேகரவின் பாதுகாப்பு தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையை தயாரித்துள்ளதாக ரொஹந்த அபேசூரிய தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஏற்பாடு செய்யப்பட்ட வாகன விபத்தில் ஷானி அபேசேகரவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரியவந்துள்ளதாக ரொஹந்த அபேசூரிய தெரிவித்தார்.
மனுதாரர் ஷானி அபேசேகரவுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென நீதிமன்றில் இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஷானி அபேசேகரவுக்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸ் பாதுகாப்பிற்கு மேலதிகமாக மேலதிக அதிகாரிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்கு முன்னர் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
ஷானி அபேசேகரவுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் பாதுகாப்பு போதுமானதாக இல்லை என ஷானி அபேசேகர சார்பில் ஆஜரான சட்டத்தரணி உபுல் ஜயசூரிய தெரிவித்தார்.
உண்மைகளை பரிசீலித்த பெஞ்ச், இந்த கோரிக்கை தொடர்பாக உரிய உத்தரவை பிறப்பிக்க டிசம்பர் 14ஆம் திகதி வழக்கை மீண்டும் அழைக்க முடிவு செய்தது.




