விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டத்தில் உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் செக்குடியரசு வீராங்கனையான மார்க்கெட்டா வோண்ட்ரூசோவா.
லண்டனில் நடைபெற்று வரும் இந்த தொடரில் நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டத்தில் 42ஆம் நிலை வீராங்கனையான செக்குடியரசின் மார்க்கெட்டா வோண்ட்ரூசோவா, 76ஆம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினாவை எதிர்த்து விளையாடினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய வோண்ட்ரூசோவா 6-3, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். விம்பிள்டன் இறுதிப் போட்டிக்கு வோண்ட்ரூசோவா தகுதி பெறுவது இதுவே முதன்முறையாகும்.
ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கரஸ், 6ஆம் நிலை வீரரான டென்மார்க்கின் ஹோல்கர் ரூனை எதிர்த்து விளையாடினார். இதில் அல்கரஸ் 7-6 (7-3), 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
அரை இறுதி சுற்றில் 3ஆம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவுடன் மோதுகிறார் அல்கரஸ்.
டேனியல் மேத்வதேவ் கால் இறுதி சுற்றில் 6-4, 1-6, 4-6, 7-6 (7-4), 6-1 என்ற செட் கணக்கில் 43ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் கிறிஸ்டோபர் யூபாங்க்ஸை தோற்கடித்தார்.




