சாவகச்சேரியில் பொலிசாருக்கு லஞ்சம் கொடுத்து ஆடு கடத்த முயன்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் வழிகாட்டுதலின் கீழ் யாழ்ப்பாணமாவட்டத்திலிருந்து வெளியிடங்களுக்கு செல்லும் வாகனங்கள் சோதனையிடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் சாவகச்சேரி பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளை கடத்திச் சென்ற முயன்றவர் சாவகச்சேரி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கடமையில் இருந்த பொலிசாருக்கு லஞ்சம் கொடுத்து தப்பிக்க முற்பட்ட போதிலும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சார்ஜன் தர அதிகாரி 50,000 ரூபாய் லஞ்சத்தினை வாங்க மறுத்துள்ளதோடு 120 ஆடுகளையும் சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளார்.
லொறியுடன் கைது செய்யப்பட்டவர்களிடம் சாரதி அனுமதி பத்திரம் இல்லை எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம், புத்தளத்தை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டனர்.
நீண்ட காலமாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளியிடங்களுக்கு ஆடு மாடுகள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுளா செனரத் அவர்களின் வழிகாட்டுதல் குறித்த பகுதிகளில் தொடர் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு குறித்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று முன்தினம் சாவகச்சேரி பொலிசாரால் மற்றொரு கால்நடை கடத்தல் முறியடிக்கப்பட்டிருந்தது. இதன்போது 11 மாடுகளும், 12 ஆடுகளும் மீட்கப்பட்டன.




