22வது திருத்தத்தை கூட்டமைப்பும் ஆதரிக்கும்: எம்.ஏ.சுமந்திரனிற்கு ஏற்பட்ட தர்மசங்கடம்!

Date:

22வது திருத்த சட்டமூலத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரித்து வாக்களிக்கும். எனினும், எம்.ஏ.சுமந்திரன் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் தவிர்க்கலாமென தமிழ்பக்கம் அறிகிறது.

22வது திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஒரிரு மணித்தியாலங்களில் வாக்கெடுப்பு இடம்பெறும்.

22வது திருத்த சட்டமூல வாக்கெடுப்பில் என்ன முடிவெடுப்பது என்பதை தீர்மானிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று கூடினர். இதில் பெரும்பாலானவர்கள் 22வது திருத்தத்தை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் இருந்தனர்.

இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டுள்ளனர்.

அவர்களில், செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம், த.சித்தார்த்தன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் 22வது திருத்தத்தை ஆதரிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் உள்ளனர்.

22வது திருத்தத்தை ஆதரிக்கலாமென்ற நிலைப்பாட்டை ஆரம்பத்தில் வெளிப்படுத்திய சி.சிறிதரன், பின்னர், பெரும்பான்மையானவர்கள் என்ன முடிவெடுக்கிறார்களோ அதை தானும் ஏற்பதாக கூறினார்.

திருத்தத்தை ஆதரிக்கலாமென ஆரம்பத்தில் குறிப்பிட்ட த.கலையரசன், தனது வழக்கத்தின் பிரகாரம், எம்.ஏ.சுமந்திரன் அருகில் உட்கார்ந்திருந்ததால், எந்த நிலைப்பாட்டையும் தெளிவாக தெரிவிக்கவில்லை.

எம்.ஏ.சுமந்திரன் மாத்திரமே மாறுபட்ட நிலைப்பாட்டில் இருந்தார்.

திருத்தத்தை எதிர்க்க வேண்டுமென்பதற்கு அப்பால், அவர் வேறொரு தர்க்கத்தை வெளிப்படுத்தினார்.

22வது திருத்தம் தொடர்பில் பாராளுமன்ற குழு கூடி முடிவெடுக்க ஏற்கெனவே சில நாட்களின் முன்னரே அழைப்பு விடுத்திருந்தார். எனினும், அப்போது பாராளுமன்றக்குழு கூடவில்லை. கூட்டத்தை நடத்த வசதியாக அனைவரும் பாராளுமன்றத்திற்கு வந்திருக்கவில்லை.

இந்த நிலையில், நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய எம்.ஏ.சுமந்திரன், 22வது திருத்தம் ஒரு ஏமாற்று வித்தை என காரசாரமாக விமர்சித்து உரையாற்றி விட்டார்.

ஆதரவுதான் அனைவரதும் நிலைப்பாடெனில், நாடாளுமன்ற குழு முன்னரே சுடி அதனை தெரிவித்திருந்திருக்கலாமே, அப்படி செய்திருந்தால் நேற்று நாடாளுமன்றத்தில் 22வது திருத்தத்தை காரசாரமாக விமர்சித்து உரையாற்றியிருக்க மாட்டேனே என்பதுதான் அவரது நிலைப்பாடு.

இன்றைய கலந்துரையாடலில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் 22வது திருத்தத்தை ஆதரிக்கலாமென்ற நிலைப்பாட்டில் உள்ளதால், கூட்டமைப்பின் 6 எம்.பிக்களும் 22வது திருத்தத்தை ஆதரித்தே வாக்களிப்பார்கள் என தெரிகிறது.

நேற்று, விமர்சித்து உரையாற்றி விட்டு, இன்று ஆதரித்து வாக்களிக்க முடியாதென்பதால், எம்.ஏ.சுமந்திரன் மாத்திரம் வேறு முடிவெடுப்பார். ஒன்றில் அவர் எதிர்த்து வாக்களிக்கலாம். அல்லது வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் தவிர்க்கலாம். இரண்டாவதற்கே அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

 

spot_imgspot_img

More like this
Related

சுவாமி விபுலானந்தர் கலாச்சார மண்டபத்தில் மாணவர்களுக்கு பரீட்சை செயலமர்வு

காரைதீவு பிரதேச சபையின் ஏற்பாட்டில், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்ரமணியம்...

ஜனாதிபதி விருதைப் பெற்ற சாய்ந்தமருது மாணவன் அன்சார் முஹம்மட் சினான்

இலங்கை சாரணர் சங்கத்தின் உயரிய கௌரவ விருதான ஜனாதிபதி சாரணர் விருதை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்