கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் இடம்பெற்ற உத்தியோகபூர்வ பொறுப்பேற்பு நிகழ்வின்போது, இதுவரை பதில் அதிபராக கடமையாற்றிய எஸ்.எம். சித்தி றிஸானாவிடமிருந்து ஏ.ஜி.எம். ரிசாத் அதிபர் பதவிக்கான பொறுப்புக்களை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹூதுல் நஜீம், நிர்வாக பிரதிக்கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபீர், கல்முனை பாடசாலைகளின் அதிபர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள், உலமாக்கள், கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள், கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தின் பிரதி அதிபர், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், புதிய அதிபரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது உரையாற்றிய கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹூதுல் நஜீம், கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய காலப்பகுதியில் ஏ.ஜி.எம். ரிசாத் ஆற்றிய கல்வி மற்றும் நிர்வாகப் பங்களிப்புகளைப் பாராட்டினார்.
அத்துடன், கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள அவர், பாடசாலையின் கல்வி முன்னேற்றம், மாணவர்களின் அடைவுமட்டத்தை மேம்படுத்துதல் மற்றும் பாடசாலையின் எதிர்கால வளர்ச்சிக்காக முன்னெடுக்க வேண்டிய பணிகள் தொடர்பிலும் அவர் கருத்துத் தெரிவித்தார்.
மேலும், பாடசாலையின் முன்னாள் அதிபர்கள் முன்னெடுத்துச் சென்ற வெற்றிகரமான பணிகளைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதுடன், பாடசாலையின் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு அதிபருக்கு ஆசிரியர்கள் மற்றும் கல்விசார் பணியாளர்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
புதிய அதிபர் ஏ.ஜி.எம். ரிசாத், கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தின் கல்வித் தரத்தை மேலும் உயர்த்துவதற்கும், மாணவர்களின் கல்வி மற்றும் ஒழுக்க வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும், பாடசாலை சமூகத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றார்.
பொறுப்பேற்பைத் தொடர்ந்து புதிய அதிபருக்கு கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், உலமாக்கள், பிரதேச முக்கியஸ்தர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.




