243 பேருடன் சென்ற இந்தோனேசியப் பயணிகள் கப்பல் ஒன்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 13) அதிகாலை ஜாவா கடற்பகுதியில் மோசமான வானிலை காரணமாகத் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் மாயமானது என்று அந்நாட்டின் தேடல் மற்றும் மீட்புப் பணி அமைப்பு தெரிவித்துள்ளது.
‘விர்கோ டிரான்ஸ்போர்ட் 8’ (Virgo Transport 8) என்ற அந்தக் கப்பல், சனிக்கிழமையன்று கிழக்கு ஜாவாவின் சுரபாயா நகரிலிருந்து தெற்கு கலிமந்தானின் பன்ஜார்மாசின் நகருக்குத் தனது பயணத்தைத் தொடங்கியிருந்தது.
“இந்த அறிக்கை வெளியிடப்படும் நேரத்தில், அந்தக் கப்பலைத் தொடர்புகொள்ள முடியவில்லை; அது எங்குள்ளது என்பது தெரியவில்லை,” என்று அந்த அமைப்பு கூறியது.
மேலும், கப்பல் கடைசியாக இருந்த இடத்திற்கு ஒரு குழுவை அனுப்பி மீட்புக் குழுவினர் தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளதாகவும் அது தெரிவித்தது.




