மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் தலைவர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான குரலிலிருந்து கொள்கை நோக்கி உரையாடல்” எனும் உயர்மட்டக் கலந்துரையாடல் நிகழ்வு இன்று (29) மட்டக்களப்பு ஹோட்டல் ஈஸ்ட் லகூனில் வெற்றிகரமாக நடைபெற்றது.
நேற்று சனிக்கிழமை (29) முற்பகல் 9.00 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்வில், இளைஞர்களின் பங்கேற்பை நாட்டின் அரசியல் மற்றும் தேசிய கொள்கை உருவாக்கச் செயற்பாடுகளில் வலுப்படுத்துவதை முதன்மை நோக்கமாக்கிக் கலந்துரையாடப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்கள் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சினைகள், அவர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் எதிர்கால தொலைநோக்குகள் தொடர்பான ஆலோசனைகள், நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நேரடியாக முன்வைக்கப்பட்டு கொள்கை ரீதியிலான தீர்வுகளைப் பெறுவது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத் உட்பட நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் வருகை தந்த 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று, இளைஞர் தலைவர்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் நேரடியாகக் கேட்டறிந்துகொண்டனர்.
திறந்த பாராளுமன்ற முன்னெடுப்பிற்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக, கோலேசன் போ இன்குலூசிவ் இம்பக்ட் நிறுவனம் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




