நிந்தவூர் றிஸாலா இஸ்லாமியக் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “மறை போற்றும் மாநபியின் புகழோங்கும் விழா” நிகழ்வு (29.08.2026) சனிக்கிழமை மாலை அமைப்பின் தலைவர் எம்.யூ. ஆஷிக் அலி (காஷிபி) அவர்களின் தலைமையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான அஷ்ரப் தாஹிர் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும், நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி ஏ.எல். றியாஸ் ஆதம் அவர்கள் விசேட அதிதியாகக் கலந்து கொண்டார்.
மாநபி முஹம்மத் (ஸல்) அவர்களின் உன்னதமான வாழ்க்கை, நற்பண்புகள், போதனைகள் மற்றும் மனிதகுலத்திற்கான அவர்களின் வழிகாட்டல்களை நினைவுகூரும் வகையிலும், அவற்றை இன்றைய தலைமுறையினரிடையே எடுத்துச் செல்லும் நோக்கிலும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்வின் போது மாணவர்களினால் மாநபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு, நற்பண்புகள் மற்றும் போதனைகளை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இந்நிகழ்ச்சிகள் மாணவர்களின் மார்க்கப் பற்றையும் நல்லொழுக்க விழுமியங்களையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தன.
இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்களான ஐ.எல்.எம். ஜாபிர், எச். அம்ஜத் அலி, எம்.ஜே.எம். ஜுசைல், கலாச்சார உத்தியோகத்தர் றஹ்மதுல்லாஹ், கதீப் பேஸ் இமாம் அமைப்பின் தலைவர் மெளலவி அப்துல் றஹ்மான், நிந்தவூர் ஜும்மா பெரிய பள்ளிவாயல் தலைவர் ஜெளபர் (பலாஹி) உள்ளிட்ட றிஸாலா அமைப்பின் உறுப்பினர்கள், நலன் விரும்பிகள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.




