பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவின் போது ஏற்பட்ட கண் பாதிப்புச் சம்பவத்தில், இதுவரை 235 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் பலர் இன்னும் வீடுகளில் தங்கியிருப்பதாக கருதப்படுவதால், அவர்களை உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்காக விசேட பேருந்து ஒன்றும் அந்தப் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் உள்ள முருகன் ஆலயம் ஒன்றில் நேற்று (20) நடைபெற்ற திருவிழாவின் போது அதிகளவில் சில மில்லியன் பெறுமதியான வானவேடிக்கைகள் மற்றும் அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள் காரணமாக பலரின் கண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கோயில் திருவிழாவில் அதிக சக்தி வாய்ந்த 1,000–2,000 வாட் HID/மெட்டல்-ஹாலைடு விளக்குகள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களில் அதிகளவான சிறுவர்களும் பெண்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆலய உற்சவத்தின் போது அதிகளவில் வானவேடிக்கைகள் வெடிக்கப்பட்டதுடன், இசை நிகழ்வின்போதும் அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள் பயன்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதன் காரணமாக பலருக்கு கண்களில் எரிச்சல், பார்வைக் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ஆலய வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த அதிக வலு கொண்ட சீனத் தயாரிப்பு மின் விளக்குகள் சிலவற்றை பொலிஸார் கையகப்படுத்தி எடுத்துச் சென்றுள்ளனர். 5000 வாற்ஸ் சக்தி மிக்க மின்விளக்குகள் ஒளிரவைக்கப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். எனினும், ஒளியமைப்பாளர் சுமார் 2000 வாற்ஸ் சக்தி மிக்க மின்விளக்குகளையே பொலிசாரிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.
கையகப்படுத்தப்பட்ட இந்த மின் விளக்குகள் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன், அவற்றின் மின்சக்தி அளவு, பயன்பாட்டுத் தன்மை மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அவை அனுமதிக்கப்பட்டவையா? அல்லது தடை செய்யப்பட்டவையா என்பது தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டு வருகிறது.
ஒளியமைப்பாளர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது, அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
புற ஊதாக் கதிர்களை வெளியிடும் இந்த மின்விளக்குகளை, பார்க்கும் தூரம், வெளிப்படும் நேரம் மற்றும் பாதுகாப்பு அமைப்பு ஆகியவற்றைப் பொறுத்து, இந்த விளக்குகளின் நேரடி வெளிச்சத்தில் கண்களில் காயங்கள் ஏற்படக்கூடும் என மருத்துவத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




