குறுகிய இனவாத, மதவாத சிந்தனைகள் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாகும் – ஸ்ரீலங்கா ஜனநாயகக் கட்சி

Date:

குறுகிய இனவாத மற்றும் மதவாத சிந்தனைகள் நாட்டை மீண்டும் அழிவுப் பாதைக்கு கொண்டு செல்லக்கூடியவை எனவும், கடந்த காலத்தின் கசப்பான அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு சகல இன மக்களும் சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை இரவு நடைபெற்ற கட்சியின் உயர்பீட கூட்டத்தின் பின்னர் ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சி பிரதிநிதிகள், 1980களில் ஆரம்பித்து 2009ஆம் ஆண்டு வரை நீடித்த இனப்பிரச்சினை மற்றும் ஆயுத மோதலால் இலங்கை எதிர்கொண்ட அழிவையும், அதன் காரணமாக மக்கள் அனுபவித்த துயரங்களையும் மறந்துவிட முடியாது.

“இனவாதமும் மதவாதமும் எந்த வடிவத்தில் வெளிப்பட்டாலும் அது இறுதியில் முழு நாட்டையும் பாதிக்கும். ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக உருவாக்கப்படும் குறுகிய சிந்தனை, நாளை இன்னொரு சமூகத்தையும் பாதிக்கும் நிலையை ஏற்படுத்தக்கூடும். எனவே, கடந்த காலத் தவறுகளை மீண்டும் செய்யாமல் அனைவரையும் சமமாக மதிக்கும் அரசியல் மற்றும் நிர்வாக கலாசாரத்தை உருவாக்க வேண்டும்”.

அரச அலுவலகங்களில் அரசியலமைப்பு, சட்டங்கள் மற்றும் அரச சுற்றுநிருபங்கள் இன, மத, மொழி வேறுபாடுகளின்றி சமமாக நடைமுறைப்படுத்தப்படும்போது தேவையற்ற முரண்பாடுகளுக்கு இடமிருக்காது. அரச நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகள் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு அல்லது இன, மத அடிப்படையிலான பார்வைகளின் அடிப்படையில் பயன்படுத்தாமல், சட்டம் மற்றும் நடைமுறைகளுக்கு அமைவாக செயல்படுவது அவசியம்.

கல்முனை ஆதார வைத்தியசாலையைச் சுற்றி அண்மையில் ஏற்பட்டுள்ள சர்ச்சைகளும் இதற்கு ஒரு முக்கியமான எடுத்துக்காட்டாகும் எனத் தெரிவித்த கட்சி பிரதிநிதிகள், அரச நிறுவனங்களில் ஏற்படும் இவ்வாறான சம்பவங்கள் தனிப்பட்ட நிர்வாகப் பிரச்சினைகளாக மட்டுப்படுத்தப்படாமல், சமூக நல்லிணக்கத்தையும் அரசாங்கத்தின் மாற்றத்திற்கான வேலைத்திட்டங்களையும் பாதிக்கும் வகையில் வளரக்கூடாது.

“நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், அரச நிறுவனங்களுக்குள் உருவாகும் இன, மத அடிப்படையிலான தேவையற்ற முரண்பாடுகள் அந்த மாற்றப் பயணத்திற்கு தடையாக அமையக்கூடாது. சட்டத்தையும் சுற்றுநிருபங்களையும் சரியாக நடைமுறைப்படுத்தினால் பல பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே தவிர்க்க முடியும்”.

இலங்கையின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடைகளில் ஒன்றாக ஊழலும், அதனுடன் இணைந்த குறுகிய இனவாத மற்றும் மதவாத சிந்தனைகளும் காணப்படுவதாகவும் கட்சி தெரிவித்தது. பொருளாதார வளர்ச்சியுடன் சமூக நல்லிணக்கமும், சட்டத்தின் ஆட்சியும், சமத்துவமும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவர் உள்ளிட்ட அனைத்து மக்களும் சம உரிமையுடனும் கௌரவத்துடனும் வாழும் நாடாக இலங்கை தொடர வேண்டும். நாம் அனைவரும் ஒருதாய் மக்களாக சகோதரத்துவத்துடன் முன்னோக்கிச் சென்றால் மட்டுமே நாட்டை உண்மையான அர்த்தத்தில் கட்டியெழுப்ப முடியும்.

இயற்கை வளங்கள், மனித வளம் மற்றும் புவியியல் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு வளங்களால் இலங்கை ஆசீர்வதிக்கப்பட்ட நாடாக இருந்தாலும், மனிதர்களுக்கிடையிலான பிரிவினைகள் மற்றும் ஊழல் போன்ற காரணிகளே நாட்டின் முன்னேற்றத்தை தாமதப்படுத்துகின்றன. எனவே, அரசியல் கட்சிகள், அரச நிறுவனங்கள், மதத் தலைவர்கள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பொறுப்புடன் செயற்பட்டு, இன மற்றும் மத வேறுபாடுகளுக்கு அப்பால் தேசிய நலனை முன்னிலைப்படுத்த வேண்டும்.

“கடந்த காலத்தில் நாம் இழந்தவற்றை மீண்டும் பெறுவதற்கான வாய்ப்பு நமக்கு உள்ளது. அதற்கு இனவாதம் தேவையில்லை; மதவாதம் தேவையில்லை; ஒருவரை ஒருவர் சந்தேகிக்கும் அரசியல் தேவையில்லை. சட்டத்தின் ஆட்சி, சமத்துவம், நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவமே புதிய இலங்கையை கட்டியெழுப்புவதற்கான அடித்தளமாக இருக்க வேண்டும்” என கட்சியின் ஊடக சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

சிறுமியை பாழடைந்த இடத்தில் விட்டுச்சென்றவர்கள் கைது!

கொடூரமாகத் தாக்கப்பட்டு, பாழடைந்த பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 4 வயது...

மட்டக்களப்பில் செஞ்சோலை படுகொலையின் 20 வருட நினைவேந்தல் தமிழ் தேசிய பேரவை—அனுஷடிப்பு

மட்டக்களப்பில் முல்லைத்தீவு செஞ்சோலை சிறுவர் 61 பேர் படுகொலையின் 20 வருட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்