நீர்கொழும்பு சிறைக்குள் ஏன் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது?: சிறைச்சாலை ஆணையாளர் விளக்கம்

Date:

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (06) ஏற்பட்ட சம்பவத்தின் போது பாதுகாப்புப் பிரிவினர் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் இன்று (07) விளக்கமளித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஆணையாளர் நாயகம், சிறைக்கைதிகள் சிறைச்சாலையின் முதலாவது இரும்புக்கதவை உடைத்துக் கொண்டு மரக்கதவு அருகில் வரை வந்திருந்ததாகவும், மரக்கதவையும் உடைத்து அவர்கள் வெளியேறியிருந்தால் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் போயிருக்கும் என்றும் கூறினார்.

அத்துடன், இரும்புக்கதவை உடைத்துக்கொண்டு வந்த கைதிகள், அங்கிருந்த சிறை அதிகாரிகளைத் தாக்கியுள்ளதாகவும், சிறை அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் கைதிகள் தப்பியோடுவதைத் தடுப்பதற்கும் எடுக்கக்கூடிய ஒரேயொரு வழிமுறையாகவே பாதுகாப்புப் பிரிவினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் இங்கு தெரிவித்தார்.

இது குறித்து சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த குமார மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“சிறைச்சாலை வளாக அமைப்பின்படி பிரதானமாக இரண்டு கதவுகள் உள்ளன. முதலாவதாக இரும்புக்கதவும், அதற்கு அடுத்ததாக மரக்கதவும் இருக்கும். இந்தக் கைதிகள் இரும்புக்கதவை உடைத்துக்கொண்டு மரக்கதவை நோக்கி வந்திருந்தனர். இந்த மரக்கதவுக்கும் இரும்புக்கதவுக்கும் இடைப்பட்ட பகுதியில் தான் பெறுமதிமிக்க உபகரணங்கள் உள்ளன. இந்தக் கைதிகள் இரும்புக்கதவை உடைத்து, இந்த மரக்கதவையும் உடைத்துக்கொண்டு வெளியே வந்திருந்தால் ஏற்பட்டிருக்கக்கூடிய அழிவை என்னால் மதிப்பிட முடியாது. எனவே, இந்த நேரத்தில் சிறை அதிகாரிகள் தங்களது உயிரைப் பணையம் வைத்து இவ்வாறு செயற்படாவிட்டிருந்தால் நிலைமை மோசமாகியிருக்கும். சிறை அதிகாரிகள் அவ்வாறு செயற்படாவிட்டிருந்தால் மிகப்பெரிய அழிவு ஏற்பட்டிருக்கலாம்.

அனைத்து சம்பவங்களும் நடந்து முடிந்திருந்த ஒரு சூழலில், அவர்கள் இரும்புக்கதவை உடைத்து மரக்கதவு அருகில் வரை வந்துவிட்டனர். அந்த நேரத்தில் எங்களது சிறை அதிகாரிகள் பெரும் எண்ணிக்கையானோர் உள்ளே கைதிகளுக்கு மத்தியில் சிக்கியிருந்ததோடு, அவர்கள் தாக்கப்பட்டுக்கொண்டிருந்தனர்.

கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தடுத்து அவர்களைக் காப்பாற்றுவதற்காகவே அதிகாரிகள் அந்த வளாகத்திற்குள் சென்றிருந்தனர். ஆனால், அந்த அதிகாரிகளும் உள்ளே சிக்கிக்கொண்டனர். அந்த நேரத்தில் தான் கைதிகள் இரும்புக்கதவை உடைத்துக்கொண்டு வெளியே வந்துள்ளனர். இந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காகவே அதிகாரிகள் அந்த மரக்கதவூடாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.” என்றார்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 120 ஜோடிப் புறாக்கள்

இலங்கைக்குக் கடத்தும் நோக்கில் கடற்கரைக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 120 ஜோடிப்...

நீர்கொழும்பிலிருந்து யாழ் சிறைக்கு மாற்றப்பட்ட 60 கைதிகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகளில் 60 பேர்...

வாழைச்சேனையில் குளத்தில் மீன்பிடிக்க சென்ற ஆண் ஒருவர் குளத்தில் இருந்து சடலமாக மீட்பு

வாழைச்சேனை சுங்காங்கேணி குளத்தில் மீன்பிடிக்க சென்ற  ஆண் ஒருவர் குளத்து நீரில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்