வவுனியா மாநகரசபை முதல்வர் சு.காண்டீபனை அந்த பதவியிலிருந்தும், உள்ளூராட்சி உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்குவதாக வடக்கு மாகாண ஆளுனர் வேதநாயகனால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதி வரை வடக்கு மாகாண மேல் நீதிமன்றம் (வவுனியா அமர்வு) உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சு.காண்டீபன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனால் தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை மனு மீதான விசாரணையின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இன்றைய அமர்வில், காண்டீபனை முதல்வர், உறுப்பினர் பதவிகளிலிருந்து நீக்கும் வர்த்தமானிக்கு இடைக்கால தடையும், இந்த வர்த்தமானியின் அடிப்படையில் எதிர்மனுதாரர் மேற்கொண்டு நடவடிக்கையெடுக்கவும், காண்டீபனிற்கு பதிலாக புதிய உறுப்பினர், மேயரை நியமிக்கவும் இடைக்கால தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இன்றைய விசாரணையின் போது, எதிர்மனுதாரர் மன்றில் முன்னிலையாகியிருக்கவில்லை. ஜூலை 15 வழக்கில் எதிர்மனுதாரரை முன்னிலையாகி ஆட்சேபணைகளை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, வழக்கின் பின்னர் கருத்து தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன்- “செங்கோல் வழக்கில் காண்டீபனிற்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதாக ஊடகங்களில் பொய்யான செய்தி வெளியாகியிருந்தது. பொலிசாரால் நீதிமன்றத்தில் தகவலொன்றை பதிவு செய்ததன் அடிப்படையில், காண்டீபனை முற்படுத்தி, அவருக்கு சரீரப்பிணை வழங்கப்பட்டுள்ளது. பொலிசாரால் நீதிமன்றத்தில் பொய்யான தகவல்களை வழக்கியிருந்ததை நீதிமன்றத்தில் தெரிவித்தோம். இந்த வழக்கு தொடர்ந்து நடந்தால், பொலிசார் கொடுத்த விடயங்களை வெளிப்படுத்துவாம்“ என்றார்.




