ஜெனீவாவில் முக்கிய சந்திப்பு; ஹோர்முஸ் நீரிணை திறப்பு, பொருளாதார தடைகள் நீக்கம் உள்ளிட்ட நிபந்தனைகள் பேசப்பட்டதாக தகவல்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான வளைகுடா போரை முடிவுக்கு கொண்டு வரும் புரிந்துணர்வு ஒப்பந்தம் (Memorandum of Understanding) எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாகலாம் என மேற்கத்திய தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஒப்பந்தத்தின் இறுதி வார்த்தை அமைப்புகள் தற்போது தயாராகி வருவதாகவும், கையெழுத்து விழா சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகம்மது பகேர் காலிபாஃப் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் என கூறப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட பொருளாதார தடைகள் நீக்கப்படுவதுடன், முடக்கப்பட்டிருந்த பல பில்லியன் டாலர் சொத்துகளும் விடுவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், லெபனானில் நடைபெற்று வரும் மோதல்களும் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் ஈரான் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், “ஈரானுடனான போருக்கு சிறந்த தீர்வை எட்டியுள்ளோம்” என வெள்ளை மாளிகையில் தெரிவித்திருந்தார். இருப்பினும், ஒப்பந்தத்தின் முழுமையான விவரங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து உலக பங்குச் சந்தைகள் உயர்வைக் கண்டதுடன், சர்வதேச எண்ணெய் விலைகளும் சரிவடைந்துள்ளன.
ஆனால், இந்த ஒப்பந்தத்தில் இஸ்ரேல் பங்கேற்கவில்லை என பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனால் லெபனான் தொடர்பான நிபந்தனைகள் எதிர்காலத்தில் சிக்கல்களை ஏற்படுத்தலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.




