சைபர் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய வெலிசர இடைநிலை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 30 சீன மற்றும் வியட்நாம் பிரஜைகள் முகாமில் இருந்து தப்பி பொரலஸ்கமுவ பகுதியில் வாடகை வீட்டில் தங்கி மீண்டும் இணைய குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர். பொரலஸ்கமுவ, டென்ஹா கண்ணுவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் இரண்டு யுவதிகள் உட்பட 21 சீன பிரஜைகளும் யுவதியொருவர் உட்பட 09 வியட்நாம் பிரஜைகளும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 10 கணினிகள், 29 ஆப்பிள் ரக கைத்தொலைபேசிகள், இணைய அணுகல் சாதனங்கள் மற்றும் பல சாதனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் உட்பட 152 பேர் கடந்த ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் வெலிசர இடைநிலை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, அங்கிருந்து தப்பி பொரலஸ்கமுவ பகுதியில் உள்ள இருமாடி கட்டிடத்தின் மேல் தளத்தை மாதாந்த வாடகைக்கு எடுத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கல்கிசை பொலிசாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் குறித்த இடம் சுற்றிவளைக்கப்பட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியுடன் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையின் போது, சில நாட்களுக்கு முன்னர் தான் இந்த இடத்திற்கு வந்ததாக தெரிவித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் எவருக்கும் விசா அல்லது கடவுச்சீட்டு இல்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



