மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பெரிய புல்லுமலை பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விசேட அதிரடிப்படை வீரர் ஒருவர் உட்பட 4 பேரை இன்று சனிக்கிழமை (11) அதிகாலையில் கைது செய்துள்ளதுடன் பூஜை பொருட்கள் மற்றும் புதையல் தோண்டும் உபகரணங்கள் மற்றும் 6 கையடக்க தொலைபேசிகளை மீட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்து சம்பவ தினமான இன்று அதிகாலை 5.00 மணிக்கு கரடியனாறு பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் பெரிய புல்லுமலை பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை சுற்றி வளைத்து விசேட அதிரடிப்படை வீரர் ஒருவர் உட்பட 4 பேரை கைது செய்ததுடன் பூஜை பொருட்கள் மற்றும் புதையல் தோண்டும் உபகரணங்களை மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்ட விசேட அதிரடிப்படை வீரர் வாழைச்சேனை விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றும் வருவதுடன் விசேட நடவடிக்கைக்காக மகா ஓயா விசேட அதிரடிப்படை முகாமில் இணைக்கப்பட்டு கடமையாற்றி வந்துள்ள 36 வயதுடைய மொனரகலைச் சேர்ந்தவர் எனவும் மற்றும் உறுகாமம், தெய்யத்தகண்டி, பெரிய புல்லுமலை பகுதிகளைச் சேர்ந்த 44, 48, 48 வயதுடையவர்கள் எனவும் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
-கனகராசா சரவணன்-



