தமிழ் சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் தேசிய கட்சிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று (9) கொழும்பில் நடந்தது.
கொழும்பு, ஜானகி ஹொட்டலில் நடந்த இந்த சந்திப்பில் இலங்கை தமிழ் அரசு கட்சி, தமிழ் தேசிய பேரவை, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய கட்சிகள் கலந்து கொண்டன.
இந்த சந்திப்பில் தமிழ் தேசிய பேரவை சார்பில் ந.காண்டீபன் கலந்து கொண்டார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன், பொ.ஐங்கரநேசன் ஆகியோர் சூம் வழியாக கலந்து கொண்டனர்.
அனைத்து தரப்பினரும் நேரடியாக கலந்து கொண்டுள்ள இந்த கூட்டத்தில், இவர்கள் சூம் வழியாக கலந்து கொள்வதற்கு சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, சூம் வழியாக கலந்து கொண்டவர்கள் அதிலிருந்து வெளியேறினர்.
இந்த கூட்டத்தில், அரசாங்கம் புதிய அரசியலமைப்பு உருவாக்கும் பட்சத்தில், அதன் உள்ளடங்க அடிப்படைகள் தொடர்பான வரைபை தயாரிப்பதற்கு சட்டத்தரணிகள் தரப்பில் 5 பேர் நியமிக்கப்பட்டனர். ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரன் தலைமையிலான அந்த குழுவுடன், இலங்கை தமிழ் அரசு கட்சி, தமிழ் தேசிய பேரவை, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய கட்சிகள் தலா ஒவ்வொரு பிரதிநிதியை நியமிக்க வேண்டுமென கூறப்பட்டது.
எனினும், ஒரு பிரதிநிதியை அனுப்புவது தொடர்பில் கட்சி தலைமையுடன் கலந்துரையாடிய பின்னரே தெரிவிக்க முடியுமென தமிழ் தேசிய பேரவை சார்பில் கலந்து கொண்ட ந.காண்டீபன் தெரிவித்தார்.



