இலங்கை கிரிக்கெட் நிறுவனம், ரியான் வான் நீகெர்க்கை தேசிய பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும், ஜோர்டான் கிரிகோரியை தேசிய களத்தடுப்பு மற்றும் சுழற்பந்து வீச்சுப் பயிற்சியாளராகவும் தேசிய உயர் செயல்திறன் மையத்தில் நியமித்துள்ளது.
2023 முதல் 2026 வரை நெதர்லாந்து தேசிய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும் இடைக்காலத் தலைமைப் பயிற்சியாளராகவும் பணியாற்றிய ரியான் வான் நீகெர்க், தேசிய ஆண்கள் அணி உட்பட இலங்கையின் அனைத்து தேசிய அணிகளின் வேகப்பந்து வீச்சையும் மேற்பார்வையிடுவார்.
தனது இடைக்காலத் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிற்கு முன்பு, வான் நீகெர்க் நெதர்லாந்து தேசிய ஆண்கள் அணியின் உதவிப் பயிற்சியாளராகவும் பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும் பணியாற்றினார். அவரது பதவிக்காலத்தில், 2023 ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் 2024, 2026 ஐசிசி ஆண்கள் ரி20 உலகக் கோப்பைகளில் நெதர்லாந்து பங்கேற்பதில் அவர் ஈடுபட்டிருந்தார்.
நெதர்லாந்து கிரிக்கெட்டிற்கு களத்தடுப்பு ஆலோசகராகப் பணியாற்றிய ஜோர்டான் கிரிகோரி, தேசிய களத்தடுப்பு மற்றும் சுழற்பந்து வீச்சுப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். உயர் செயல்திறன் மையத்தில், தேசிய ஆண்கள் அணி உட்பட இலங்கையின் அனைத்து தேசிய அணிகளின் களத்தடுப்பு மற்றும் சுழற்பந்து வீச்சு ஆகியவற்றை அவர் மேற்பார்வையிடுவார்.
நெதர்லாந்து கிரிக்கெட்டுடன் இருந்த காலத்தில், கிரிகோரி 2023 ஐசிசி ஆண்கள் ரி20 உலகக் கோப்பை உட்பட பல இருதரப்பு மற்றும் பன்னாட்டுப் போட்டிகளுக்குப் பங்களித்துள்ளார்.
இரு பயிற்சியாளர்களும் 2026 ஏப்ரல் 15 முதல் தொடங்கும் இரண்டு ஆண்டு காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளனர் என்று இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.



