குளிரூட்டப்பட்ட அலுவலகப் போக்குவரத்துப் பேருந்தில் திருடப்பட்ட இரண்டு பசுக்களை ஏற்றிச் சென்று இறைச்சிக்காக விற்க முயன்ற சந்தேகத்தின் பேரில், மூன்று நபர்களைக் கைது செய்து விளக்கமறியலில் வைக்குமாறு ஹெட்டிப்பொல நீதவான் நீதிமன்றம் நேற்று (25) உத்தரவிட்டது.
பசுத் திருட்டில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்ட அலுவலகப் போக்குவரத்துப் பேருந்தின் உரிமையாளர், அவரது சகோதரர் மற்றும் மற்றொரு நபர் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். சந்தேக நபர்கள் மூவரும் பிங்கிரிய பகுதியைச் சேர்ந்தவர்கள். பசுத் திருட்டில் முக்கிய சந்தேக நபர் பயன்படுத்திய முப்பத்திரண்டு இருக்கைகள் கொண்ட குளிரூட்டப்பட்ட பேருந்து, வார நாட்களில் பிங்கிரியவிலிருந்து கொழும்பு, பேட்டைக்கு அலுவலக ஊழியர்களை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்படும் பேருந்தாகும்.
அலுவலகப் போக்குவரத்துச் சேவை இயங்காத நாளான கடந்த சனிக்கிழமை (21) அதிகாலையில், சந்தேக நபர்கள் மூவரும் பிங்கிரியவில் உள்ள கரம்பவத்த எஸ்டேட்டிற்குள் கம்பி வேலியை வெட்டி இரகசியமாக நுழைந்து, அங்கு கட்டப்பட்டிருந்த இரண்டு பசுக்களைத் திருடியுள்ளனர். அந்த இரண்டு பசுக்களும் பேருந்தில் கொண்டு செல்லப்பட்டு, ஆனமடுவவில் உள்ள பல்லம பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு இறைச்சிக்காக விற்கப்படவிருந்ததாக பிங்கிரிய பொலிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தது.




