யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் மனைவியின் தாய், தந்தையை வாளால் வெட்டிய மருமகன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வாள்வெட்டுக்கு இலக்கான மாமியார் உயிரிழந்தார். மாமனார் படுகாயமடைந்துள்ளார்.
நேற்று (11) இந்த சம்பவம் நடந்தது.
வடமராட்சி, கரவெட்டி மத்தி பகுதியில் வசித்து வந்த ஒருவரே தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் கரவெட்டி மத்தியில் மனைவி, பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். அவர் குடி, போதைக்கு அடிமையானவர் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது மனைவி அரச உத்தியோகத்தர். கணவர் மது அருந்தவும் மனைவியிடமே பணம் பெற்று வந்துள்ளார். கணவரால் தொடர் துன்புறுத்தலுக்கு இலக்காகி, குடும்பத் தகராறு ஏற்பட்டு, நெல்லியடி பொலிஸ் நிலையத்திலும் சில தடவைகள் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தம்பதியரிடையே குடும்பத் தகராறு ஏற்படும் போது, பெற்றோர் தலையிட்டு சமரசம் செய்துள்ளனர்.
சில நாட்களின் முன்னர், மீண்டும் குடும்பத்தகராறு ஏற்பட்டு, கணவன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
நேற்று திடீரென வீட்டுக்கு வந்த கணவன், மனைவி மற்றும் பிள்ளைகளுடன் தனிமையில் பேச வேண்டுமென குறிப்பிட்டு, வீட்டு அறைக்குள் வருமாறு அழைத்துள்ளார். எனினும், மனைவி மறுத்து விட்டார். எதுவானாலும் இந்த இடத்திலேயே பேசிக்கொள்ளலாம் என தெரிவித்துவிட்டார்.
இதன்போது, தமது தந்தை வாள் ஒன்றை மறைத்து வைத்திருந்ததை அவதானித்த பிள்ளைகள், இது குறித்து தாயாரையும் எச்சரித்து, அவர்கள் வீட்டை விட்டு தப்பிச்சென்று விட்டனர்.
இதன்பின்னர், மாலையில், மனைவியின் தந்தை வாள்வெட்டுக்கு இலக்கானதாக குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது.
பருத்தித்துறை பகுதியில் கடை வைத்திருந்த மாமனாரை தேடிச்சென்ற மருமகன், அவரை வெட்டியுள்ளார். படுகாயமடைந்த மாமனார் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமது தந்தை வாள்வெட்டுக்கு இலக்கான பின்னர், பிறிதொரு வீட்டில் வசித்து வந்த தாயை பார்க்க பிள்ளைகள் சென்றுள்ளனர். வீட்டில் தாயார் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார். அவரது இரண்டு கைகளிலுமே வாள்வெட்டு காயம் காணப்பட்டது. அதிக இரத்த போக்கினால் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
இதன்பின்னர், தலைமறைவாக இருந்த மருமகன் பருத்தித்துறை பொலிசாரால் கைது செய்யப்பட்டார். மாமன், மாமி மீது வாள்வெட்டு நடத்தியதாக அவர் ஒப்புக்கொண்டார்.
கைதான மருமகன் இன்று நெல்லியடி பொலிசாரிடம் ஒப்படைக்கப்படுவார்.



