வவுனியாவில் தொடர்ந்தும் பெய்துவரும் கடும் மழையின் காரணமாக பேரிடர் ஏற்பட்டுள்ளது. வவுனியாவின் பல இடங்களிலும் வீடுகள், வர்த்தக நிலையங்கள், ஆலயங்கள், பாடசாலைகள் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் புகுந்துள்ளமையினால் மக்கள் பெரும் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர்.
வெள்ளத்தில் அகப்பட்ட மக்கள்
இதேவேளை வவுனியாவில் கந்தசாமி நகர், பழைய மெனிபார்ம், கோதண்டர்நொச்சிக்குளம், பூம்புகார் ஆகிய இடங்களில் வெள்ளத்தில் அகப்பட்ட பல குடும்பங்களை சேர்ந்தவர்கள் வெளியேற முடியாத நிலையில் காணப்படுகின்றனர். இவர்களை மீட்பதற்கு முப்படையினரது உதவி கூறப்பட்டுள்ளது.
உலங்குவானூர்தி மூலம் மக்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை கைகூடாமையினால் கடற்படையின் உதவியுடன் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மாவட்ட செயலக கூட்டம்
வவுனியா மாவட்டத்தில் பேரிடர் ஏற்பட்டதை அடுத்து மாவட்ட செயலகத்தில் இன்று விசேட கூட்டம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம், அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், முப்படை அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள் அழைக்கப்பட்டு அனர்த்த செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
குளங்களின் நிலை
இந் நிலையகல் பாவற்குளத்தின் நான்கு வாண் கதவுகளும் முழுமையாக பத்து அடிவரை திறக்கப்பட்டுள்ளதுடன் பேராறு அணைக்கட்டின் மூன்று வான்கதவுகளும் ஐந்து மீட்டர் வரை திறக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அதனை அண்டிய பகுதிகளில் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளதுடன் இக் குளங்களுக்கு கீழுள்ள பல குளங்கள் உடைப்பெடுத்துள்ளதையும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
இதேவேளை பல குளங்கள் உடைப்பெடுக்கும் அபாயம் இருப்பதன் காரணமாக குளக்கட்டுகளை வெட்டி நீரை வெளியேற்றும் செயற்பாட்டில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
வைத்தியசாலைகள்
இந்நிலையில் நெடுங்கேணி, போகஸ்வெவ போன்ற வைத்தியசாலைகளுக்குள் நீர் சென்றதன் காரணமாக வைத்திய சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. அவசர சேவைகள் மட்டும் இடம்பெறுகின்றது. வவுனியா வைத்தியசாலையில் அனைத்து செயற்பாடுகளும் இடம்பெற்று வருவதோடு மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் மற்றும் யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பட வேண்டிய நோயாளர்களை கொண்டு செல்வதற்கு முப்படையினரது உதவி சுகாதார பிரிவினர்களால் கேரப்பட்டுள்ளது.
போக்குவரத்து
இந்நிலையில் வவுனியாவில் இருந்து மக்கள் தென்பகுதி நோக்கியோ யாழ்ப்பாணம் நோக்கியோ செல்ல முடியாத வகையில் நொச்சிமோட்டை பாலம் மற்றும் சாந்தசோலை பகுதியில் பல அடி உயரத்திற்கு நீர் ஏ9 வீதியை ஊடறுத்து செல்வதுடன் கல்குண்ணாமடு மற்றும் ஈரப்பெரியகுளம் போன்ற பகுதிகளிலும் ஏ9 வீதி ஊடறுத்து பல அடி உயரத்துக்கு நீர் செல்வதன் காரணமாக குறித்த பகுதிகளின் ஊடாக மக்கள் போக்குவரத்து செய்வதற்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர்.
இந்நிலையில் பல கிராமங்களுக்கான வீதிகளும் தடைபட்டுள்ளதுடன் குறித்த வீதிகளின் ஊடாக ஊடறுத்து வெள்ளநீர் பாய்ந்து வருவதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
உணவு வசதிகள்
இடம்பெயர்ந்த மற்றும் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு சமைத்த உணவுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளும் மாவட்ட செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளமையினால் அந்தந்த பகுதி கிராம சேவையாளர் ஊடாக பாதிக்கப்பட்ட மக்கள் பதிவு செய்து தங்களுக்கான சமைத்த உணவுகளை பெற்றுக் கொள்வதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மக்களுக்கான சமைத்த உணவை வழங்க போதுமான நிதி வசதிகள் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட செயலகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தன்னார்வ தொண்டர்கள், அரசியல்வாதிகள் சமைத்த உணவுகளை வழங்கி வருகின்றனர்.
தொலைபேசி
இந்நிலையில் கையடக்க தொலைபேசி வலையமைப்புக்கள் பல இடங்களில் செயழிலந்துள்ளமையினால் மக்களை தொடர்பு கொள்வதிலும் பெரும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள்
இதேவேளை பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியை மேற்கொள்ளப்பட வேண்டிய பிரதேசங்களில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் மற்றும் செ. திலகநாதன் உடனிருந்து செயற்பட்டு வருவதுடன் பிரதேசசபை தலைவர்கள் மற்றும் சில உறுப்பினர்களும் மக்களுக்கான தேவைகளை முடியுமான வரை செயற்படுத்தி வருகின்றனர்.



