ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலங்கைத்துறை பகுதியில் பஸ் ஒன்றினை மறித்து குழு ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டு தாக்குதலில் பேரூந்தில் பயணித்த 6 பேர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று (27) காலை சுமார் 7.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இலங்கைத்துறையில் இருந்து மூதூர் நோக்கி பயணிக்கும் தனியார் பஸ் ஒன்றே இலங்கைத்துறை சந்தியில் வைத்து வழிமறிக்கப்பட்டு அதில் பயணித்த பயணிகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் மூதூர் நீதிமன்றில் உள்ள வழக்கு ஒன்றிற்காக பயணித்த 5 பேரும் பேரூந்தின் உதவியாளருமே படுகாயமடைந்துள்ளனர்.
முகங்கள் மறைக்கப்பட்ட 15 க்கும் மேற்பட்ட நபர்களினால் குறித்த பேரூந்தானது இலங்கைத்துறை சந்தியில் வைத்து வழிமறிக்கப்பட்டு பேரூந்தின் சாவியை கையில் எடுத்துக் கொண்டு பின்னர் வாள் மற்றும் கோடரி போன்ற ஆயுதங்களினால் பேரூந்தில் இருந்த வழக்கிற்காக சென்றவர்கள்மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது பேருந்தின் உதவியாளரும் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த வெட்டுச் சம்பவத்தில் காயமடைந்த 6 பேரும் மூதூர் தள வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் ஒருவர் திருகோணமலை வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
2024.04.03 அன்று இடம்பெற்ற ராசா என்பவரின் கொலை தொடர்பான வழக்கின் தவணைக்காக இன்றையதினம் (27) அதனுடன் தொடர்புடைய நபர்கள் நீதிமன்றத்திற்கு சென்ற நிலையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் வழக்குடன் தொடர்புடைய கந்தையா கமலதாசன் (வயது 45), கமலதாசன் கதுர்ஷன் (வயது 24), கமலதாசன் கஜேந்திரன் (வயது 27), இராசு கிசாந்த் (வயது 22), முகமட் பாயிஸ் விதுர்ஷன் (வயது 19) ஆகியோரும் பேரூந்தில் உதவியாளராக கடமையாற்றிவந்த கே ஜெயந்தன் (வயது 23) என்பவருமே படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



