வடமராட்சி, நெல்லியடி பொலிஸ் பிரிவில் நேற்றிரவு 12 மணியளவில் ராஜகுலேந்திரன் பிரிந்தன் வயது 29 என்ற இளம் குடும்பஸ்தர் இனம் தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
கரணவாய், முதலைக்குழி பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.
நேற்றிரவு 12 மணியளவில் தொலைபேசி அழைப்பு வந்ததுக்கு அமைவாக குறித்த இளம் குடும்பஸ்தர் மோட்டார் சைக்கிளில் வீட்டிலிருந்து வெளியேறி சென்றதை பார்த்ததாகவும், சற்று நேரத்தில் மகனை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது பதில் கிடைக்கவில்லையென்றும், 15 நிமிடத்தின் பின்னர் அவரை தேடிச்சென்ற போது வீதியில் அவர் வீழ்ந்து கிடந்ததாகவும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்ததாகவும், உயிரிழந்த இளைஞனின் தந்தை தெரிவித்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட இளைஞர் மோட்டார் சைக்கிளில் செல்லும் காட்சியும், ஒரு மோட்டார் சைக்கிளில் இரண்டு சந்தேக நபரகள் செல்லும் காட்சிகளிலும் அப்பகுதி சி.சி.ரி.வியில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இந்த இளைஞன் பிரான்ஸ் நாட்டில் இருந்து திரும்பி வந்தவர். பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் பெண் ஒருவரை பதிவுத்திருமணம் செய்து மீண்டும் பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல இருந்த நிலையில் குறித்த கொலை சம்பவம் இடம் பெற்றுள்ளது.
நுன்சாக் என்ற தற்காப்பு கலை ஆயுதத்தினால் இளைஞனின் கழுத்தின் இரண்டு பக்கங்களிலும் குத்தப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
சடலத்தை நீதவான் பார்வையிட்ட பின்னர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை குற்றத்தடுப்பு பிரிவு, நெல்லியடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.




