எல்ல பேருந்து விபத்தில் உயிர் பிழைத்த ஒருவர், சம்பவம் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு பேருந்தின் சாரதி பிரேக் செயலிழந்ததாகக் கூறியதாகத் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட ஆண் நபர், சாரதி மற்றும் நடத்துனருடன் உரையாடலில் ஈடுபட்டதாகவும், அப்போது ஒரு வளைவில் செல்லும்போது பிரேக் செயலிழந்ததாக சாரதி தனக்குத் தெரிவித்ததாகவும் கூறினார்.
நடத்துனரும் அருகிலுள்ள மற்ற பயணிகளும் சாரதியின் கருத்தைக் கேட்டு சிரித்ததாகவும், பொய் சொல்கிறார் என்று கூறியதாகவும் அவர் மேலும் கூறினார்.
“இருப்பினும், அவர் இரண்டாவது வளைவில் சென்றபோது, பிரேக் இல்லை என்பதை நாங்கள் உணர்ந்தோம். பின்னர் பேருந்து எதிர் திசையில் வந்த ஒரு வாகனத்தின் மீது மோதியது, அதன் பிறகு அது பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. சுமார் ஒரு மணி நேரம் மயக்கமடைந்து, ஒரு குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு விழித்தேன். என்னால் நகர முடியவில்லை. பின்னர், சிறப்புப் படையினர் வந்து எங்களை மீட்டனர், ”என்று அவர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர் சிகிச்சை பெற்று வரும் பதுளை மருத்துவமனையில் இருந்து ஊடகங்களுக்குப் பேசும்போது இந்த தகவலை வெளியிட்டார்.
நேற்று இரவு வெல்லவாய நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று ஜீப் மீது மோதி 1000 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் மொத்தம் 15 பேர் உயிரிழந்தனர் மற்றும் 18 பேர் காயமடைந்தனர்.
விபத்து நடந்தபோது பேருந்தில் சுமார் 30 பேர் இருந்தனர், சம்பவத்தில் 06 ஆண்கள் மற்றும் 09 பெண்கள் உயிரிழந்தனர்.
காயமடைந்தவர்களில் 6 ஆண்கள், 5 பெண்கள், 3 ஆண் குழந்தைகள் மற்றும் 2 பெண் குழந்தைகள் அடங்குவர்.
தங்காலையிலிருந்து எல்லவுக்கு ஒரு சுற்றுலாவாக அந்தக் குழு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




