யாழ் மாநகரசபை முதல்வர் தெரிவில் இலங்கை தமிழ் அரசு கட்சியை ஆதரிக்க தீர்மானித்துள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பி.டி.பி) செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவத்தார்.
இன்று (12) மாலை தமிழ்பக்கம் அவரை தொடர்பு கொண்டு உள்ளூராட்சி மன்றங்களில் இலங்கை தமிழ் அரசு கட்சியுடன் இணைந்து செயற்படுவது தொடர்பான முடிவை கேட்டபோது, இதனை தெரிவித்தார்.
யாழ் மாநகரசபை உள்ளிட்ட சபைகளில் இலங்கை தமிழ் அரசு கட்சியை ஆதரிக்க தீர்மானித்துள்ளோம். எனினும், பகிரங்க வாக்கெடுப்பின் மூலமே ஆதரவை தெரிவிப்போம். இரகசிய வாக்கெடுப்பு எனில், வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கியிருப்போம் என தெரிவித்தார்.
இதன்மூலம், இலங்கை தமிழ் அரசு கட்சி, ஈழமக்கள் ஜனநாயக கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய கட்சிகளின் கூட்டணி உறுதியாகியுள்ளது.
இதேவேளை, கடந்த உள்ளூராட்சிசபை காலத்தில் யாழ் மாநகரசபையில், ஈ.பி.டி.பியின் ஆதரவுடன் வி.மணிவண்ணன் ஆட்சியில் நீடித்ததை சுட்டிக்காட்டிய டக்ளஸ் தேவானந்தா, அப்போது மணிவண்ணன தரப்பினர் இரவு 9 மணிக்கு பின்னர் சிறிதர் தியேட்டருக்கு இரகசியமாக வந்து தம்மை சந்தித்து ஆதரவு கோரியதாகவும், மணிவண்ணன் தரப்பிலிருந்து வந்தவர்களில் வி.பார்த்தீபனும் உள்ளடங்கியிருந்தார் என்றும் தெரிவித்தார்.



