வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எச். அதுல திலகரத்ன என்ற கைதி விடுவிக்கப்பட்டதாகவும், இந்த சம்பவத்தின் பின்னணியில் கடுமையான முறைகேடு இருப்பதாகவும் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி செயலகம் அவதானம் செலுத்தியுள்ளது.
அரசியலமைப்பின் பிரிவு 34 (1) இன் படி, கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு காணப்படுகிறது. அதன்படி, சிறைச்சாலை அதிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட கைதிகளின் பட்டியல் நீதி அமைச்சுக்கு அனுப்பப்படும். இந்தப் பட்டியல் நீதி அமைச்சினால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்படும். அதன்படி, ஜனாதிபதியின் ஒப்புதலுடன், அந்தக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுகிறது.
இருப்பினும், மேற்கூறிய சம்பவம் தொடர்பாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தால் 2025-05-06 அன்று ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்பட்ட பொது மன்னிப்புக்கு தகுதியான கைதிகளின் பட்டியலில் 388 பெயர்கள் காணப்பட்டன. மேலும் அநுராதபுரம் சிறைச்சாலையில் நிதி மோசடி தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்ட குறித்த நபரின் பெயர் அந்தப் பட்டியலில் எங்கும் சேர்க்கப்பட்டிருக்கவில்லை. அதாவது, ஜனாதிபதி பொது மன்னிப்புக்காக அங்கீகரித்த 388 பெயர்களில் அந்த நபரின் பெயர் உள்ளடக்கப்படவில்லை.
இந்த சம்பவம் குறித்து விசேட விசாரணையை முன்னெடுக்கக் கோரி, ஜனாதிபதி செயலகத்தினால் நேற்று (06) “ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அங்கீகரிக்கப்படாத கைதியின் விடுதலை தொடர்பாக” என்ற தலைப்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட்டு, எதிர்காலத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி செயலகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தின் பின்னணி
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் 388 கைதிகள் பல்வேறு சிறைகளிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இவர்களில் நிதி மோசடி வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் வங்கி மேலாளர் டபிள்யூ.எம். அதுல திலகரத்னவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா நேற்று நாடாளுமன்றத்தில் கவலைகளை எழுப்பினார்.
ரூ.4 மில்லியன் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றவாளியாகக் கண்டறியப்பட்ட சந்தேக நபருக்கு மே மாத தொடக்கத்தில் அனுராதபுர உயர் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, வெசாக் போயா தினத்தன்று, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மன்னிப்பு வழங்கினார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா தெரிவித்தார்.
ஊடக அறிக்கைகளின்படி, திலகரத்ன பல வழக்குகளை எதிர்கொள்வதால், மன்னிப்பு வழங்குவதில் பின்பற்றப்பட்ட அளவுகோல்கள் மற்றும் நடைமுறைகளை நாடாளுமன்ற உறுப்பினர் பெரேரா கேள்வி எழுப்பினார். வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்கு அவர் அழைப்பு விடுத்தார், ஆனால் அமர்வின் போது அரசாங்கத்தால் எந்த பதிலும் வழங்கப்படவில்லை.
பல செய்தித்தாள்களும் இந்த வழக்கை முன்னிலைப்படுத்தி, ஒரு கடுமையான நிதி குற்றவாளிக்கு மத விழாக்களின் போது சிறிய குற்றங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு ஏன் வழங்கப்பட்டது என்று கேள்வி எழுப்பின.



