முல்லைத்தீவு, கருநாட்டுக்கேணி பகுதியில் இன்று (21) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 9 வயது பாடசாலை மாணவி ஒருவர் உயிரிந்துள்ளார்.
பேக்கரி உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் நடமாடும் முச்சக்கர வண்டியில் பணிஸ் வாங்குவதற்காக சிறுமியும், தாயாரும் வீதிக்கு வந்துள்ளனர். தாயார் வீதியோரம் நின்றபடி, வீதியின் மறுகரைக்கு சென்று முச்சக்கர வண்டியில் பணிஸ் வாங்க சிறுமியை அனுப்பியுள்ளார்.
சிறுமி வீதியின் மறுபக்கத்தை கவனிக்காமல், முச்சக்கர வண்டியை மறிக்க, வீதியின் மறுகரைக்கு செல்ல எத்தனித்த போது, மறுபக்கமிருந்த வேகமாக வந்த கூலர் வாகனம் சிறுமியை மோதித்தள்ளியது.
சிறுமியின் தலையில் பலத்த காயமேற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவத்தில் தொடர்புடைய வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் பகுதியை சேர்ந்த வாகனமே விபத்தை ஏற்படுத்தியது. மீன் ஏற்றிக்கொண்டு செல்லும் போது இந்த சம்பவம் நடந்தது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கிளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




