உள்ளூராட்சி தேர்தலில் இலங்கை தமிழ் அரசு கட்சியினர் வாக்காளர்களுக்கு மதுபானம் வழங்கினார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்த, ஜனநாயக தமிழ் அரசு கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஈ.சரவணபவன், பாதுகாப்பு கவலை காரணங்களின் நிமித்தம் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறியுள்ளதாக தமிழ் பக்கம் அறிந்தது.
கடந்த உள்ளூராட்சி தேர்தலில் இலங்கை தமிழ் அரசு கட்சியினர் வன்னி பிரதேசத்தில் வாக்காளர்களுக்கு கசிப்பு வழங்கினார்கள் என பாராளுமன்றத்தில் அமைச்சர் பிமல் ரத்னாயக்க வெளிப்படுத்தினார்.
இதை தமிழ் அரசு கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மறுத்திருந்தார்.
இந்த நிலையில், கடந்த 11ஆம் திகதி தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைமையிலான கூட்டணியில் வெற்றியீட்டிய வேட்பாளர்களுடனான வெற்றிக்கொண்டாட்டம் யாழ்ப்பாணத்தில் நடந்தது. இதில் உரையாற்றிய பங்காளிக்கட்சி தலைவர்களில் ஒருவரான ஈ.சரவணபவன், வட்டுக்கோட்டை பிரதேசத்தில் தமிழ் அரசு கட்சியினர் மதுபானம் வழங்கினார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.
சரவணபவனின் வாக்கு வங்கி பெரும்பாலும் வட்டுக்கோட்டை தொகுதியை சார்ந்தது. அவரது செயற்பாட்டாளர்கள் பெரும்பாலும் வட்டுக்கோட்டையை சேர்ந்தவர்கள். சரவணபவன் தமிழரசு கட்சியை விட்டு வெளியேறிய பின்னர், அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்தும் தமிழரசு கட்சியில் தொடர்கிறார்கள்.
சரவணபவனின் பேச்சை தொடர்ந்து, வட்டுக்கோட்டை தொகுதி தமிழ் அரசு கட்சி செயற்பாட்டாளர்கள் கொதித்து போயுள்ளனர்.
இன்று மட்டும் சுமார் 70-80 தொலைபேசி அழைப்புக்கள் சரவணபவனிற்கு சென்றுள்ளன. அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், இளைஞர்கள் அவரது இருப்பிடத்திற்கு வருவதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று பிற்பகல் 2 மணிக்கு புகையிரதத்தில் சரவணபவன் கொழும்புக்கு புறப்பட்டு சென்றார்.
இந்த பயணம் முன்கூட்டியே திட்டமிடப்படவில்லையென்றும், 2 மணிக்கு புறப்படும் பயணத்துக்காக, யாழ் புகையிரத நிலைய அதிகாரியொருவரை தொடர்பு கொண்டு 11.30 மணிக்கே ஆசனம் முற்பதிவு செய்தார் என்றும் தமிழ் பக்கம் அறிந்தது.
மதுபானம் வழங்கிய சம்பவங்கள் உண்மையா?
கடந்த சில தேர்தல்களில் பொதுமக்களுக்கு மதுபானம் வழங்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. முன்னர் ஒரு காலத்தில் தென்னிலங்கை ஆளும் தரப்புக்கள் மட்டுமே இதை செய்தன. எனினும், கடந்த சில தேர்தல்களில் தமிழ் அரசு கட்சி மீதும் இதேவிதமான குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலேயே இந்த குற்றச்சாட்டு அதிகமாக உள்ளது. அங்கு, இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் இலங்கை தமிழ் அரசு கட்சியும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும் போட்டிபோட்டுக்கொண்டு சாராயம் விநியோகித்ததாக சமூக வலைத்தளங்களிலும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. மட்டக்களப்பு மாநகரசபையில் போட்டியிட்ட தமிழ் அரசு கட்சி வேட்பாளர் ஒருவர் பெண்களுக்கு துணிகள் வழங்கியதாகவும் சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டு எழுந்தது.



