தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் களேபரத்தில் ஈடுபட்ட பெண் மீது, அரசியல் மற்றும் அதிகார செல்வாக்கினால் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, அரச வைத்திய அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
கடந்த 02.04.2025 அன்று இரவு ஆதார வைத்தியசாலை, தெல்லிப்பளையின் அவசர சிகிச்சை பிரிவில் பெண்ணொருவர் களேபரத்தில் ஈடுபட்டார்.
அவர் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வலி வடக்கில் சொகுசு ஹொட்டல் ஒன்றை நிர்மாணிக்கும் ஒருவரின் தாயார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருடன் உதவியாளராக வந்த பெண்ணே களேபரத்தில் ஈடுபட்டார்.
வடக்கின் பொலிஸ் உயரதிகாரி ஒருவரின் அழுத்தத்தினால் நடவடிக்கை எடுக்கப்படவில்லையென வைத்தியர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
அந்த பெண்ணை காப்பாற்றும் விதமாக, வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளரும், விசாரணையொன்றுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் வைத்தியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த பின்னணியிலேயே அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் போராட்டத்துக்கு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அறிக்கையில்-
இடம்பெற்ற, தனிநபர் ஒருவரால் வைத்தியசாலை ஊழியர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பாக, வைத்தியசாலை நிர்வாகம் காத்திரமான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காததை கண்டித்தும், வைத்தியர்களுடனும் ஏனைய வைத்தியசாலை ஊழியர்களுடனும் தொடர்புடைய பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறியதை கண்டித்தும், மேலும் அது தொடர்பான நடுநிலையான, பக்கச்சார்பற்ற விசாரணை ஒன்றை உடனடியாக ஆரம்பிக்க வலியுறுத்தியும், எதிர்வரும் 02.04.2025 அன்று காலை 8.00 மணி முதல் 03.04.2025 காலை 8.00 மணி வரையிலான அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேற்கொள்ள இருக்கின்றது. இதற்கு ஏனைய வைத்தியசாலை தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவிக்க உள்ளன.
வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிரான மேலதிக குற்றச்சாட்டுகள்:
ஆதார வைத்தியசாலை, தெல்லிப்பளை –
1. மருத்துவ நிபுணர்களின் ஒருமித்த சேவையை நோயாளர்களுக்கு வழங்க இயலாத வகையில் புறச்சூழ்நிலைகளை உருவாக்குதல்.
2. நிபுணர்களால் முன்மொழியப்படும் சிகிச்சைத் திட்டங்களை உரிய தரப்புகளுடன் கலந்துரையாடாமல், தானாகவே நிராகரித்தல்.
3. புற்றுநோய் சிகிச்சை மற்றும் மனநல சிகிச்சை பிரிவுகளை திறம்பட நிர்வகிக்கத் தவறியமை.
4. இவ்வைத்தியசாலையின் அபிவிருத்தியில் பங்காற்றக்கூடிய முக்கிய நிர்வாக கூட்டங்களில் (பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம், மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம், ஆளுநர் மற்றும் பிரதம செயலாளர் அலுவலகம் ஏற்பாடு செய்யும் கூட்டங்கள்) நீண்ட காலமாக பங்கேற்காமலும், பொறுப்புகள் வகிப்பதில் இருந்து விலகியுள்ளமை.
5. வைத்தியசாலை நோயாளர் சங்க சேமிப்பு நிதியை, நோயாளர்களின் மருத்துவ தேவைகளுக்காக பயன்படுத்தத் தவறியமை.
6. புற்றுநோயாளர்களின் நன்மைக்காக யாழ் மருத்துவ பீடம் முன்மொழிந்த “Nuclear Medicine Unit” உருவாக்கத்தில் தடைகள் ஏற்படுத்தியமை.
எனவே, இதற்குரிய உடனடி விசாரணைகளை ஆரம்பித்து, வைத்தியசாலை ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, மக்களுக்கு உரிய தரமான சிகிச்சை வழங்கும் சேவை நிலையமாக மாற்றுவதற்கான நிர்வாக சூழ்நிலைகளை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.




