இன்று (22) காலை கட்டுநாயக்க, ஆடியம்பலம, தெவமொட்டாவ பகுதியில் தொழிலதிபர் ஒருவரை சுட்டுக் கொல்ல மேற்கொள்ளப்பட்ட முயற்சி தொடர்பாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று காலை 10:00 மணியளவில், இரு துப்பாக்கிதாரிகள் தொழிலதிபரின் வீட்டிற்கு வந்துள்ள நிலையில், வட்டிக்கு கடன் வாங்குவதற்காக வந்ததாகக் கூறியுள்ளனர்.
துப்பாக்கிதாரிகளால் இலக்கு வைக்கப்பட்டவர் அஞ்சன என்ற 37 வயது தொழிலதிபர் ஆவார், இவர் தெவமொட்டாவ பகுதியில் வசித்து, வட்டிக்கு பணம் வழங்கும் தொழிலில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இரு துப்பாக்கிதாரிகள் சிவப்பு நிற ஸ்கூட்டர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ள நிலையில், மோட்டார் வாகனத்தின் ஆவணங்களை கொண்டு வந்து பணம் பெற வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
துப்பாக்கிதாரிகளின் நடத்தையில் சந்தேகம் கொண்ட தொழிலதிபர், அவர்கள் வீட்டிற்குள் நுழைந்தவுடன் ரிமோட் கண்ட்ரோல் மூலம் வீட்டு கேட்டை உடனடியாக மூடியுள்ளார்.
இதனால் பதற்றமடைந்த துப்பாக்கிதாரிகள் தொழிலதிபரை சுட முயன்றபோது, அவர்களது துப்பாக்கி செயல்படவில்லை.
தொழிலதிபர் துப்பாக்கிதாரிகளுடன் மோதியதைத் தொடர்ந்து, அவர்கள் கொலை முயற்சியை கைவிட்டு வீட்டை விட்டு தப்பிக்க முயன்றுள்ளனர்.
ஆனால், மூடப்பட்ட கேட் காரணமாக, அவர்கள் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு, 9 அடி உயரமுள்ள சுவரில் ஏறி தப்பிக்க முயன்றனர்.
சுவரில் இருந்து குதித்தபோது, ஒரு துப்பாக்கிதாரியின் கால் எலும்பு முறிந்தது. அவர் சுவருக்கு வெளியே விழுந்து கிடந்தபோது, தனது துப்பாக்கியால் தலையில் சுட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார், ஆனால் அப்போதும் துப்பாக்கி இயங்கவில்லை.
அதனை தொடர்ந்து அம்பாறை பகுதியைச் சேர்ந்த 33 வயது சந்தேக நபர் கட்டுநாயக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இதன்போது, அவரிடம் இருந்து ஒரு கைத்துப்பாக்கி, அதற்கு பயன்படுத்தப்படும் 5 தோட்டாக்கள், 9 மி.மீ பிஸ்டலுக்கு பயன்படுத்தப்படும் 9 தோட்டாக்கள் கொண்ட மகசின், மற்றொரு 9 மி.மீ பிஸ்டலுக்கான வெற்று மகசின் ஆகியவை மீட்கப்பட்டன.
காயமடைந்த சந்தேக நபர் நீர்க்கொழும்பு பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மற்றொரு துப்பாக்கிதாரி, 9 மி.மீ பிஸ்டல் ஒன்றுடன் சுவரில் ஏறி தப்பியோடியுள்ளார்.
இவர் நீர்க்கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக கட்டுநாயக்க பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



