35 வயதுடைய ஒருவர் கடத்தப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டு, அவரது உடல் எரிக்கப்பட்டதாகவும், எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டதாகவும், கொலையில் சந்தேகத்தின் பேரில் மூன்று ஆண்களும் ஒரு இளம் யுவதியும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அனுராதபுரம் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு கூறுகிறது.
கொடூரமாக கொலை செய்யப்பட்ட நபர் தர்மதாச அஷான் புத்திக என்ற 35 வயதுடைய இரண்டு குழந்தைகளின் தந்தை ஆவார். அவர் மதவாச்சி, குளிக்கடை என்ற முகவரியில் வசித்து வந்தார்.
இந்தக் கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் வாரியபொல, அவுலேகமவைச் சேர்ந்த 22 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அனுராதபுரத்தில் உள்ள ஒரு ஸ்பா மையத்தில் பணிபுரிந்து வந்தவர்.
இதுதவிர 26, 28 மற்றும் 36 வயதுடைய ஆண்களும் கைதாகியுள்ளனர்.. இவர்கள் நாத்தாண்டியா, எப்பாவல மற்றும் கிரிந்திவெல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
இறந்தவர் 21 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக மதவாச்சி நீதிமன்றத்திற்குச் சென்றார், பின்னர் வீடு திரும்பவில்லை என்று அவரது மனைவி முறைப்பாடு செய்திருந்தார். அதைத் தொடர்ந்து, புத்தளம் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டபோது, இந்தக் கொலை தொடர்பான பல தகவல்களைக் கண்டறிந்தது.
ஸ்பாவில் பணிபுரிந்த 22 வயதான யுவதி, அங்கு சேவை பெற வந்த 36 வயதான நாத்தாண்டியாவை சேர்ந்த சந்தேகநபர் ஒருவருடன் காதல் உறவை ஏற்படுத்தியுள்ளார். இதற்கிடையில், கொல்லப்பட்ட நபரும் ஸ்பாவிற்கு சென்று, யுவதியின் அழகில் மயங்கி, அவருக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.இது பற்றி தனது 36 வயது காதலனிடம் கூறியுள்ளார்.
36 வயதுடைய பிரதான சந்தேக நபர், தனது நண்பர்கள் குழுவுடன் சேர்ந்து இந்தக் கொலையைத் திட்டமிட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, அனுராதபுரம் நகரத்திலிருந்து ஒரு கார் வாடகைக்கு எடுக்கப்பட்டு, இறந்தவருக்கு சந்தேகம் ஏற்படாத விதமாக அனுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகத்திற்கு அருகாக அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர், ரம்பேவ வீதியில் உள்ள ஒரு உள்ளூர் மதுபானக் கடையில் இருந்து மது அருந்தி, இறந்தவரையும் குடிக்கச் செய்தனர். அப்போது, கண்ணாடிப் போத்தலால் அவரது தலையில் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்குப் பிறகு, அவர் மயக்கமடைந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர் மஹாவிலச்சிய வீதியில் உள்ள லோலுகஸ்வெவ பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு காரில் கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவர் இறந்த பிறகு, ஓயாமடுவ காவல் பிரிவில் உள்ள துனுமதலாவ வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, டயர்கள் மற்றும் பெட்ரோல் ஊற்றி உடல் எரிக்கப்பட்டது தெரியவந்ததாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும், பெண் சந்தேக நபரும் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தனர்.