கொழும்பு மாநகர சபை உட்பட பல உள்ளூராட்சி நிறுவனங்களில் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுப்பதைத் தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (07) இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
பல அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்கள் தங்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அனுமதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. கடந்த வாரம் மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரிக்கப்பட்ட ஒரு தொகுதி வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு உத்தரவிட்டிருந்தது. அப்போது தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் எஞ்சியிருந்தவற்றில்- கொழும்பு மாநகரசபை உள்ளிட்ட- சிலவற்றிற்கும், இன்று புதிதாக தாக்கல் செய்யப்பட்ட யாழ் மாவட்ட சபைகளிற்கும் இந்த இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்டத்தில் தமது தரப்பில் நிராகரிக்கப்பட்ட 10 சபைகளிற்குமான மேன்முறையீட்டை இன்று சமர்ப்பித்ததாகவும், அந்த சபைகளிற்கும் தேர்தல் நடத்த இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர் குருசாமி சுரேந்திரன் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.
அதன்படி, இந்த மனுக்கள் மீதான ஆட்சேபனைகளை மே 5ஆம் திகதிக்கு முன் தாக்கல் செய்யுமாறு நீதியரசர்கள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மனுதாரர்களின் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் மே 7ஆம் திகதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, மனுக்கள் மீதான விசாரணைகளை மே 16ஆம் திகதி எடுத்துக்கொள்ள திகதியிடப்பட்டது.
அந்த திகதி வரை குறித்த இடைக்கால தடை உத்தரவு அமுலில் இருக்கும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் குறித்த வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்று கூறி, வேட்புமனுக்களை நிராகரிக்க தேர்தல் அதிகாரிகள் எடுத்த முடிவை சட்டவிரோதமானது என்று அறிவிக்கக் கோரி, அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.