ஏறாவூர், மயிலம்பாவெளி பிராதான வீதியில், மதுபோதையில் சிவில் உடை அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பொலிஸாரின் மோட்டார் சைக்கிளை முந்திக்கொண்டு சென்ற வர்த்தகரை நிறுத்தி, தலைக்கவசத்தால் தாக்கிய சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை (18) இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதலில் வர்த்தகர் படுகாயமடைந்ததோடு, சம்பவத்தை ஏற்படுத்திய பொலிஸார் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
வந்தாறுமூலையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த வர்த்தகர் குணரட்னம் மதிகுமார், ஏறாவூர் மயிலம்பாவெளி கிராம சேவகர் காரியாலயத்திற்கு முன்பாக, முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளை முந்திய போது, குறித்த பொலிசார் அவரை நிறுத்தி, “நாங்கள் பொலிஸார், நீ மோட்டார் சைக்கிளை தவறாக செலுத்துகிறாய்” எனக் கூறி, தலைக்கவசத்தால் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் அருகில் இருந்த பொதுமக்களின் கவனத்தை ஈர்த்ததாகவும், அவர்கள் உடனடியாக பொலிஸ் அவசர இலக்கம் 1919-க்கு தகவல் வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தகவல் பெற்றதையடுத்து, ஏறாவூர் பொலிஸார் சம்பவ இடத்திற்கு முச்சக்கரவண்டியில் விரைந்து சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அந்த நேரத்தில் தாக்குதலை நடாத்திய பொலிஸார் இருவரும் மதுபோதையில் இருப்பது உறுதியாகியதோடு, அவர்களை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து செல்ல முயன்ற போது, இருவரும் பொலிஸ் நிலையத்தை அண்மித்தவுடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த இரு பொலிஸாரும் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் நீதிமன்ற பிரிவில் பணியாற்றுபவர்கள் என்பதும், சம்பவம் நடந்த அன்று காலை 11.00 மணிக்கு நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பின்னர் தலைமறைவாகியிருப்பதும் தெரியவந்துள்ளது.
தாக்குதலுக்கு உட்பட்ட வர்த்தகர் இதுகுறித்து முறையிட்டதோடு, சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸாரை கைது செய்யும் நடவடிக்கைகள் ஏறாவூர் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய இரு பொலிஸாரும் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.



